நவாஸ் ஷெரீப் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதித்த பாகிஸ்தான் மதகுரு
தேர்தலில் முறைகேடு செய்து பதவிக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷெரீப் பதவி விலகக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் லாகூரில் இருந்து பேரணியாக கிளம்பி இஸ்லாமாபாத் வந்தடைந்தார்.
மேலும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிர் உல் காத்ரி தலைமையிலான தொண்டர்களும் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த 15ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றம், பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையை கடந்த 19ம் தேதியில் இருந்து மறித்துவிட்டனர். அவர்கள் நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து காத்ரி திங்கட்கிழமை கூறுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நான் 48 மணிநேரம் கெடு விதிக்கிறேன். அதற்குள் அவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்றார்.