பாக்.ல் தொடர்ந்து பதட்டம்... லாகூர், கராச்சிக்கும் பரவியது நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் இடையிலான மோதலில் 7 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனபோதும், தனது போராட்டத்தைக் கைவிட இயலாது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போராட்டம் லாகூர் மற்றும் கராச்சிக்கும் பரவியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்பை பதவி விலகக் கோரி கடந்த 14-ந் தேதி முதல் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும் போராட்டம் நடத்தி வருகின்றது. இதனால் பாகிஸ்தானில் பதட்ட சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இந்த விசயத்தில் சுமூகநிலையை கொண்டு வருவதாகக் கூறி ராணுவம் தலையிட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்பை இம்ரான் கானும், தாஹிர் உல் காதிரியும் சந்தித்துப் பேசினர்.
ராணுவம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினரும், மத குரு தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியினரும் நேற்று இரவு பிரதமர் நவாஸ் ஷெரிப் வீடு நோக்கி பேரணியாக சென்றனர்.
வன்முறை வெடித்தது...
ஏற்கனவே, போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியை சூழ்ந்து கொண்டுள்ள நிலையில், சுமார் 30 ஆயிரம் தொண்டர்கள் பிரதமர் வீடு நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் அவர்கள் அதிபர் மாளிகை முன்பு இருந்த தடுப்புகளை கிரேன் மூலம் அகற்ற முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
7 பேர் பலி...
ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்தும், வன்முறையை தடுக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர், 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கைது...
காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மறுப்பு...
இதற்கிடையே போராட்டத்தை நிறுத்திக் கொள்ள இயலாது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இம்ரான்கான், ‘எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடுவோம்' என்றும், பாகிஸ்தான் முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
போராட்டம் தொடரும்...
மேலும், நவாஸ் ஷெரிப் பதவி விலகும் வரையில் போராட்டம் தொடரும். போலீசார் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கின்றனர். நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு தொடர்வேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள், குழந்தைகள்...
போதிய உணவும், தண்ணீரும் கிடைக்காத போதும் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள போராட்டக்காரர்கள், போராட்டம் நடைபெறும் இடங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை மட்டும் காப்பாற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதட்ட சூழல்...
தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் பாகிஸ்தானில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், போராட்டம் லாகூருக்கும், கராச்சியும் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.