"லேட்"டாய் வந்த மாஜி அமைச்சர் – விமானத்தில் ஏற விடாமல் விரட்டியடித்த பயணிகள்!
கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.பி ஒருவரும் விமானத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகளால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் விமானம் ஏறுவதற்கு காலதாமதமாக வந்தனர்.
இதனால் விமானத்தில் ஏறிய இருவரும் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர்.
பாகிஸ்தான் விமானம்:
கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது.
2 மணி நேரம் காத்திருப்பு:
அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் அமைச்சர் மாலிக்கும், எம்.பி. ரமேஷ் குமாரும் வரவில்லை. அவர்களின் வருகைக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் புறப்படவில்லை.
பயணிகள் ஆத்திரம்:
மிகவும் தாமதமாக வந்த இருவரும் விமானத்தில் ஏற முயன்றபோது, ஆத்திரமடைந்த பயணிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்:
உங்களுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டதுடன் மாலிக்கை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.
விட்டுச் சென்ற விமானம்:
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகும், அவர்களை விமானத்தில் ஏற விடவில்லை. இதனால், அவர்கள் இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றது.
வீடியோ ஒளிபரப்பு:
முன்னாள் அமைச்சருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வெளியீடு:
அந்த வீடியோவில் ரமேஷ் குமார் இல்லை. ஆனால், அவரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று செய்தி வெளியானது.
விமான நிறுவனம் மழுப்பல்:
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும், மாலிக்கிற்காக காத்திருக்கவில்லை என்றும் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் மசூத் தஜ்வார் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ் செய்தி:
காலதாமதம் தொடர்பாக பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.