தொடர்ந்து 2வது ஞாயிறாக இன்றும் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 33 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவரில் இன்று காரில் வைத்த குண்டு வெடித்ததில் 33 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு வெளியே நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 80 பேர் பலியாகினர். இந்நிலையில் அதே பெஷாவரில் உள்ள கிசாசா க்வானி மார்க்கெட் பகுதியில் இன்று காரில் வைத்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் 33 பேர் பலியாகினர், மேலும் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் காவல் நிலையத்தை குறி வைத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அண்மை காலமாக கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் தாலிபான்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.