பாகிஸ்தான் இந்து கோயில்கள்: புத்தகம் வெளியிட்ட பெண் எழுத்தாளர்- அத்வானி 'ஆப்சென்ட்'
டெல்லி: பாகிஸ்தானிலுள்ள இந்து கோயில்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய புத்தகத்தை அந்த நாட்டு பெண் எழுத்தாளர் ரீமா அப்பாசி டெல்லியில் வெளியிட்டார்.
இந்தியாவும், பாகிஸ்தானும், சுதந்திரத்துக்கு முன்பாக ஒரே நாடாக இருந்தபோது இந்து கோயில்கள் பல தற்போதைய பாகிஸ்தான் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்தன. பல நூறு ஆண்டுகாலத்துக்கு முன்பிருந்தே அங்கு கோயில்கள் இருந்துள்ளன.
மனசாட்சிக்கு அழைப்பு
இதை ஆவணப்படுத்தி, எழுத்தாளர் ரீமா அப்பாசி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 'பாகிஸ்தானிலுள்ள வரலாற்று கோயில்கள்-மனசாட்சிக்கு ஒரு அழைப்பு' (Historic Temples in Pakistan - A Call to Conscience) என்ற பெயரில் அந்த புத்தகம் வெளியாகியுள்ளது.
அத்வானி ஆப்சென்ட்
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இப்புத்தகத்தை ரீமா அப்பாச்சி வெளியிட்டார். பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு அந்த மாகாணத்தில் பிறந்தவரும், பாஜக மூத்த தலைவருமான அத்வானி இந்த நிகழ்சிக்கான சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும் ஏனோ, கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
நம்பிக்கை அழியாது
ரீமா அப்பாச்சி வெளியிட்டுள்ள புத்தகத்தில் பாகிஸ்தானிலுள்ள இந்து கோயில்கள் குறித்து 400 படங்கள் உள்ளன. புத்தகத்தை வெளியிட்டு பேசிய ரீமா அப்பாச்சி, "வாழ்க்கை நிலையற்றது, ஆனால் நம்பிக்கை என்பது அழியாமல் தொடர கூடியது" என்பதுதான் புத்தகத்தை பற்றி கூறக்கூடிய ஒற்றை வரியாக இருக்கும் என்றார்.
ஆன்மீக சுற்றுலா
பாகிஸ்தானிலுள்ள இந்து கோயில்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்ல இந்தியர்கள் முன்வந்தால் அதன்மூலமாக சுற்றுலா வளரும் என்றும் ரீமா அப்பாச்சி நம்பிக்கை தெரிவித்தார்.