ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கியோட்டாவில் பிரதமர் அபேவுடன் சந்திப்பு!!
டோக்கியோ: ஜப்பானுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் அந்நாட்டு பிரதமர் அபேவை கியோட்டாவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரமர் நரேந்திரமோடி ஜப்பானின் கியோட்டோவிற்கு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்றடைந்தார்.
இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை கியோட்டோ நகரில் சந்தித்து பேசினார். அப்போது இருபிரதமர்களும், வாராணசி, கியோட்டோ நகர்களுக்கிடையேயான கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் கியோட்டோ நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் மோடி ஓய்வெடுக்க சென்றார்.. இன்று இரவு மோடிக்கு டோக்கியோவில் அபே விருந்தளிக்கிறார். அப்போது ஷின்சோ அபேயுடன் இருநாட்டு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, இந்தியா - ஜப்பானிடையே பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, அணு ஆற்றல் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் நகரத்தை பார்வையிட உள்ள மோடி, இந்தியாவிலும் அதுபோன்ற 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னதாக டிவிட்டர் இணைய தளத்தில், தனது ஜப்பான் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மோடி தெரிவித்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வளம் பொருந்திய நாடாக மாறுவது தொடர்பான தனது எண்ணங்களை செயல்படுத்தவும் இந்த பயணத்தின் மூலம் வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆசியாவின் இரண்டு பாரம்பரியமிக்க ஜனநாயக நாடுகளான இந்தியா, ஜப்பான் உறவில் ஒரு புதிய அத்தியாயமாக தனது இந்த பயணம் அமையும் என்றும் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.