கருப்பர் இன வாலிபரை 6 முறை சுட்டுத் தள்ளிய அமெரிக்க போலீஸ்.. பிரேதப் பரிசோதனை அறிக்கை
நியூயார்க்: அமெரிக்காவில் வெள்ளையர் இன போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பர் இன வாலிபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம் தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை போலீஸ் அதிகாரி 6 முறை சுட்டுத் தள்ளியுள்ளார்.
நெற்றியில் இரண்டு குண்டுகளும், தோளில் 4 குண்டுகளும் பாய்ந்துள்ளன. முன்னாள் இருந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் போலீஸ் அதிகாரி.
துப்பாக்கிச் சூட்டின்போது சம்பந்தப்பட்ட கருப்பர் இன வாலிபரான மைக்கேல் பிரவுன் நிராயுதபாணியாக இருந்துள்ளார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருட்டில் ஈடுபட்ட வாலிபர்
செயின்ட் லூயிஸ் நகருக்கு அருகே உள்ள கடையில் தனது நண்பருடன் சேர்ந்து பிரவுன் திருட்டில் ஈடுபட்டு விட்டுத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக தற்போது மிசெளரி மாகாணத்தில் பெரும் இனக் கலவரம் வெடித்துள்ளது. ஊரடங்கும், அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. கலவரம் அதிகரித்துள்ள பெர்குசன் நகரில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது.
தனியாக பிரேதப் பரிசோதனை
பிரவுனின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன்னாள் நியூயாய்ர்க நகர தலைமை மருத்துவ அதிகாரி மைக்கேல் பேடன் என்பவர் தனியாக ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்தி அதன் விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில்தான், பிரவுன் எப்படி சுடப்பட்டார் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டை ஓட்டை துளைத்த குண்டு
பிரவுனின் நெற்றியில் பாய்ந்த ஒரு குண்டு அவரது மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு பாய்ந்துல்ளது. குண்டு தாக்கிய வேகத்தில் பிரவுனின் தலை முன்னோக்கி கவிழ்ந்து விட்டது. இதனால்தான் மரணம் சம்பவித்துள்ளது.
முதலில் தோள்பட்டையில்
முதலில் தோள்பட்டையில் பிரவுன் சுடப்பட்டுள்ளார். பின்னர்தான் நெற்றியில் சுட்டுள்ளார் அந்த அதிகாரி என்றும் தெரிய வந்துள்ளது.
அருகே இருந்து சுடவில்லை
மேலும் பிரவுனை அந்த போலீஸ் அதிகாரி மிக நெருக்கமாக இருந்து அதாவது - பாயிண்ட் பிளாங்க் - சுடவில்லை என்றும் கூறப்படுகிறது. சற்று தொலைவில் இருந்துதான் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
3 பிரேதப் பரிசோதனைகள்
பேடன் நடத்தியது போக மேலும் இரண்டு பிரேதப் பரிசோதனைகளும் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயது மருத்துவர்
டாக்டர் பேடனுக்கு 80 வயதாகிறது. மிகவும் மூத்த மருத்துவ நிபுணர் இவர். மேலும் தடயவியலில் மிகச் சிறந்த நிபுணரும் கூட. இவர் மறைந்த அதிபர் ஜான் எப் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியயர் ஆகியோரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை மறு பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனிப்பட்ட முறையில் 20,000க்கும் மேற்பட் பிரேதப் பரிசோதனைகளையும் செய்துள்ளார்.