ரஷ்ய உளவாளி விஷம் வைத்துக் கொலை... வெளிப்படையான விசாரணை நடத்த இங்கிலாந்து முடிவு
லண்டன்: கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி ஒருவர் லண்டனில் டீயில் விஷம் கலந்து கொல்லப்பட்டது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் தெரசா மே அறிவித்துள்ளார்.
ரஷ்ய உளவாளியாக இருந்தவர் அலெக்சாண்டர் லிட்வினென்கோ. இவர் கடந்த 2006-ம் ஆண்டு, லண்டனில் உள்ள மிலேனியம் ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டில் வேறு ஒருவருடன் டீ சாப்பிட சென்றபோது விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்.
அலெக்சாண்டர் சாப்பிட்ட டீயில் பொலோனியம்-210 என்ற கதிரியக்க பொருள் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருடன் டீ சாப்பிட சென்ற அந்த இன்னொரு நபர் ரஷ்ய உளவாளி என்றும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நீதி வேண்டும்...
"ரஷ்ய உளவுத்துறையில் இருந்து விலகி வந்து, லண்டனில் குடியிருந்த அலெக்சான்டரை, ஏன் ரஷ்ய உளவுத்துறை கொல்ல வேண்டும்?" என அலெக்சான்டரின் மனைவி மரியானா கணவரின் மர்ம மரணத்திற்கு எதிராக கொதித்தெழுந்தார்.
பிரிட்டிஷ் உளவாளியா..?
"பிரிட்டனில் குடியேறிய அலெக்சான்டர், பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6க்காக பணிபுரிந்திருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அந்த விபரத்தை அறிந்த ரஷ்யர்கள் அவரை கொன்று விட்டனர். அவர் பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6க்காக பணிபுரிந்தாரா என்ற உண்மையை பிரிட்டிஷ் அரசு வெளியிட வேண்டும்" என அவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
ரகசியம்...
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹோக் தரப்பில், "உளவுத்துறை தொடர்பான சில ரகசியங்கள் வெளியிடப்பட முடியாதவை. அவற்றை வெளியிடுவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. அந்த வகையில், இந்த விபரத்தையும் வெளியிடாமல் ரகசியம் காக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது.
தேசிய பாதுகாப்பு....
லண்டன் ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்ஸில் வழக்கை விசாரித்த நீதிபதி சர் ராபர்ட் ஓவன், "இது தொடர்பான ரகசிய ஆவணங்களை உளவுத்துறை தனிப்பட்ட முறையில் எனக்கு (நீதிபதிக்கு) காட்ட வேண்டும். நான் பார்த்துவிட்டு, அவற்றை வெளியிடுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், வழக்கை டிஸ்மிஸ் செய்கிறேன்" என தீர்ப்பளித்தார்.
சந்தேகம்...
இதன் மூலம் மேலும் சர்ச்சை உண்டானது. பிரிட்டிஷ் அரசின் தயக்கத்தின் மூலம் அலெக்சான்டர், பிரிட்டிஷ் உளவுத்துறைக்காக பணிபுரிந்தபோது ரஷ்யாவால் கொல்லப்பட்டார் என்ற சந்தேகம் வலுவானது.
வரவேற்பு...
இந்நிலையில், நேற்று அலெக்சாண்டரின் மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்த விசாரணையை அலெக்சாண்டரின் மனைவி மரியானா வரவேற்றுள்ளார். மேலும், நீதி தாமதமாகக் கிடைத்தாலும், என் கணவரின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தை இந்த உலகம் அறிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.