தாலிபன் தாக்குதல் எதிரொலி... கடைசி நிமிடத்தில் பாக். பயணத்தை ரத்து செய்தார் மாலத்தீவு அதிபர்
இஸ்லாமாபாத்: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியான தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளார் மாலத்தீவு அதிபர்.
மாலத்தீவின் அதிபரான அப்துல்லா யாமீன், பாகிஸ்தான் நாட்டுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலத்திற்குள் பாதுகாப்பு வீரர்கள் போல உடையணிந்து நுழைந்த தாலிபன் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 28க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதனால், தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் வரும் மாலத்தீவு அதிபரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப் பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் மாலத்தீவு அதிபர் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களையொட்டியே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுதான் அப்துல்லா யாமீன் பயணம் ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.