உக்ரைன் விவகாரம்: ஜி-8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷியா அதிரடி நீக்கம்- நெருக்கடியில் புடின்
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் ஜி-8 நாடுகள் அமைப்பில் இருந்து அந்நாட்டை இடைநீக்கம் செய்து அமெரிக்கா உள்ளிட்ட மற்ற 7 நாடுகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், ரஷியா ஏற்பாடு செய்த மாநாட்டையும் அந்நாடுகள் ரத்து செய்திருப்பதால், அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் கிளர்ச்சி வெடித்து ரஷிய ஆதரவாளராக இருந்த அதிபர் விக்டர் யானுகோவிச் விரட்டியடிக்கப்பட்டு அங்கு இடைக்கால ஆட்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உக்ரைனில் சுயாட்சி பிரதேசமான கிரிமியாவுக்கு தனது ராணுவத்தை அனுப்பியது ரஷ்யா. பிறகு அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் ரஷியா இணைத்துக் கொண்டது.
ரஷியாவின் இந்த திடீர் படையெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதனை ரஷ்ய அதிபர் புதின் கண்டுகொள்ளவில்லை. பொருளாதார தடைகளையும் கண்டு கொள்ளாமல் தனது திட்டத்தின்படியே கிரிமியாவை ரஷியாவுடன் இணைத்துக் கொண்டார் புடின்.
இப்பிரச்சினைகளுக்கு முன்னதாக வளர்ந்த 8 நாடுகளின் (ஜி-8) தலைவர்கள் மாநாட்டை ரஷியாவில் உள்ள சோஷி நகரில் வருகிற ஜூன் மாதம் நடத்த புடின் ஏற்பாடு செய்திருந்தார்.
ஜி-7 மாநாடு...
இந்நிலையில் நெதர்லாந்து நாட்டிலுள்ள தி கேக் நகரில் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பாக ஜி-7 என்று அழைக்கப்படும் வளர்ந்த 7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
விவாதம்...
இந்த மாநாடு உடனடி தேவை தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்டு இருந்தாலும், உக்ரைன் விவகாரம் பற்றியும், ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இடைநீக்கம்...
அதன் தொடர்ச்சியாக ரஷியா ஏற்பாடு செய்த ஜி-8 மாநாட்டை ரத்து செய்வது என்றும், இந்த வளர்ந்த 8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்வது என்றும் அம்மாநாட்டில் 7 நாட்டு தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
மாநாடு இடமாற்றம்...
அதோடு ரஷியாவில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த மாநாட்டை ரத்து செய்து 7 நாட்டு தலைவர்கள் மாநாடாக பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸ்சில் ஜூன் மாதம் நடத்துவது என்றும் ஒருமனதாக முடிவு செய்து கூட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் ஜி-7 ஆனது....
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ந்த 8 நாடுகள் அமைப்பில் ரஷியா சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது ரஷ்யா நீக்கப் பட்டதையடுத்து மீண்டும் அந்த அமைப்பு ஜி-7 அமைப்பாக மாறுகிறது.
நெருக்கடியில் புடின்....
மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மேலும் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்ற 7 நாடுகளின் எச்சரிக்கையால் அதிபர் புதினுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.