கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் மனிதாபிமான உதவி பொருட்கள் லாரிகள்! அனுமதி பெறாமல் சென்றதாக உக்ரைன் கோபம்
மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் பகுதிக்கு உக்ரைனின் அனுமதி பெறாமல் 90 லாரிகளில் மனிதாபிமான உதவி பொருட்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இது ஒரு பகிரங்கமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என உக்ரைன் கொந்தளித்துள்ளது.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்து வந்த கிரிமியா பொது வாக்கெடுப்பு நடத்தி, ரஷ்யாவுடன் கடந்த மார்ச் மாதம் இணைந்து கொண்டது. இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா மீது எரிச்சலை ஏற்படுத்தியது.
கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்நாடு மீது பொருளாதார தடைகள் விதித்தன.
கிரிமியா போன்று கிழக்கு உக்ரைனும் ரஷ்யாவுடன் சேர விரும்புகிறது. அங்கு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் படையுடன் கடும் சண்டையிட்டு இரண்டு மாகாணங்களை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டனர்.
இப் பகுதிகளில் பாதிக்கபட்ட மக்களுக்கு ரஷ்யா உதவி பொருட்களை அனுப்புவதாக அறிவித்தது. ஆனால் ஆயிரக்கணக்கான லாரிகளை அனுப்பக் கூடாது என்று உக்ரைன் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் திடீரென உக்ரைனின் எல்லையை கடந்து இன்று ரஷ்யா வாகனங்கள் கிழக்கு உக்ரேனுக்குள் சென்றன.
இதற்கு உக்ரேன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அப்பட்டமான 'ஆக்கிரமிப்பு' என்று உக்ரைன் கொந்தளித்துள்ளது.