கருங்கடல் பகுதியில் யு.எஸ். போர்க்கப்பல் மீது பறந்த ரஷிய போர் விமானத்தால் பதற்றம்!!
மாஸ்கோ: கருங்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பலுக்கு மிக நெருக்கமாக ரஷியாவின் போர் விமானம் பல முறை பறந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
உக்ரைன், கிரிமியா பதற்றத்தைத் தொடர்ந்து கருங்கடல் பரப்பு போர்முனையாக உருவெடுத்திருக்கிறது. அப்பகுதியில் கடந்த 10-ந் தேதி முதல் அமெரிக்காவின் டொனால் கூக் என்ற போர்க்கப்பல் முகாமிட்டுள்ளது. இது போரில் பயன்படுத்தக் கூடிய ஹெலிகாப்டர்களை தாங்கிய கப்பலாகும்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று ரஷியாவின் போர் விமானங்களில் ஒன்றாக எஸ்.யூ-24, அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு மேலாக 900 மீட்டர் உயரத்துக்குள் 12 முறை குறுக்கே குறுக்கே பறந்து சென்றது. மொத்தம் ஒன்றரை மணி நேரம் ரஷிய விமானம் இப்படி பறந்து சென்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க போர்க்கல் தொடர்ச்சியாக எச்சரிக்கை சமிக்ஞைகளை பல முறை விடுத்தது. ஆனாலும் ரஷிய போர் விமானம் குறுக்கீடு செய்து பறப்பதை நிறுத்தவில்லை. இது ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்கிறது அமெரிக்கா.
இந்நிலையில் உக்ரைனின் மேலும் 10 நகரங்களை ரஷியா கைப்பற்றக் கூடிய அபாயம் இருக்கிறது என்றும் பன்னாட்டு அமைதிப் படையை அனுப்புமாறும் ஐ.நா.விடம் உக்ரைன் கேட்டிருக்கிறது. இதனால் தொடர்ந்தும் கருங்கடல் பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.