சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் செளதி இளவரசர், யு.ஏ.இ. முதல் பெண் விமானி!
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் செளதி இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானி மரியம் அல் மன்சோவ்ரி ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுவாக உள்ள ரக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவும், அரபு நாடுகளும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தீவிரவாதிகளின் தலைநகரான ரக்கா உள்ளிட்ட நகரங்கள் மீது போர் விமானங்கள் சராமரி தாக்குதலை நடத்துகின்றன.
டோமஹாக் ஏவுகணைகள்
இந்த தாக்குதலில் டோமஹாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டன. 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்தும் இலக்கு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த கட்டிடங்கள், ஆயுதக்கிடங்குகள், சோதனை சாவடிகளும், ஈராக்-சிரியா எல்லையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் ஏராளமானோர் பலியானதுடன், பலர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரபு நாடுகள்
அமெரிக்காவுடன், செளதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகள் தாக்குதலில் பங்கேற்றுள்ளன. பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி வருகிறது.
செளதி இளவரசர்
இந்நிலையில் சவூதிய அரேபியாவின் இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானியான மரியம் அல் மன்சோவ்ரியும் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அவர்கள் ராணுவ விமானம் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் தீவிரவாதிகள் மீது குண்டு வீசிய பின்னர் செளதி அரேபியா இளவரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், விமானத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மரியம் அல் மன்சோவ்ரி
ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானியான மரியம் அல் மன்சோவ்ரி எப்.16 போர் விமானத்தை இயக்கி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மரியம் 2007ம் ஆண்டு ஐக்கிய அரபு குடியரசு படையில் இணைந்தார். இப்போது அவர் விமானப்படை கமாண்டராக உள்ளார்.