சிரியா: அரசு பள்ளியில் குண்டு வெடித்ததில் 41 குழந்தைகள் பலி
பெய்ரூட்: சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த 41 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.
சிரியாவின் கோம்ஸ் நகரம் ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் நேற்று அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் இரண்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் அப்பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த 41 குழந்தைகள் பலியாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையே மேலும் பல மாணவர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.