"போட்டோ எடுத்தது நானு.. ஆனா இவிங்க அடிச்சுக்கிறாங்க...ஹய்யோ ஹய்யோ!".. உர்ர்ர்
ஜகார்தா, இந்தோனேசியா: ஒரு குரங்கு தனது அழகு முகத்தை போட்டோ எடுத்து விட்டது. ஆனால் அந்தப் புகைப்படத்துக்காக இப்போது விக்கிபீடியாவும், ஒரு இந்தோனேசிய புகைப்படக்காரரும் காப்பிரைட் யாருக்கு என்பதில் முட்டி மோதி வருகின்றனர்.
போட்டோவுக்கான காப்பிரைட் எனக்கே என்று அந்த புகைப்படக்காரரும், அதெல்லாம் கெடையாது, போட்டோ எடுத்தது குரங்குதான். அதுக்குத்தான் காப்பிரைட், அது வந்து கேட்கட்டும் என்று விக்கிபீடியாவும் மல்லுக்கட்டி வருகின்றனராம்.
காப்பிரைட் உலகில் இந்த போராட்டம் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது.. நடந்தது என்னன்னா...
இந்தோனேியாவின் சுலவேசி தீவில் 3 வருடங்களுக்கு முன்பு டேவிட் ஸ்லேட்டர் என்ற புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
ஆட்டையைப் போட்ட மனிதக் குரங்கு
அப்போது சுலவேசி தீவில் வசித்து வரும், அழியும் நிலையில் உள்ள அரிய வகை மனிதக் குரங்கான "மெக்காக்" வகை குரங்கு ஒன்று ஸ்லேட்டரின் கேமராவைத் திருடிக் கொண்டு போய் விட்டது.
நூற்றுக்கணக்கில் போட்டோ எடுத்த குரங்கு
கையில் கிடைத்த கேமராவை இயக்கி அது நூற்றுக்கணக்கில் புகைப்படமும் எடுத்துத் தள்ளியது. அதில் சில செல்ஃபி புகைப்படங்களாகும். அத்தனையும் அபாரமாக இருந்ததால் உலகம் முழுதும் இது பிரபலமாகி விட்டது.
எடுத்துப் போட்ட விக்கிபீடியா
இந்த நிலையில் இந்த செல்ஃபி படங்களை விக்கிபீடியா தனது பக்கத்தில் போட்டு விட்டது. அதிலும் பப்ளிக் டொமைனில் போட்டுள்ளது. இது குரங்கு எடுத்த செல்ஃபி என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது கூறியிருந்தது.
கொந்தளித்த ஸ்லேட்டர்
இதைப் பார்த்து கொந்தளித்து விட்டார் ஸ்லேட்டர். புகைப்படம் செல்ஃபியாக இருந்தாலும், கேமரா என்னுடையது. எனக்குத்தான் காப்பிரைட் உள்ளது. எனது அனுமதி பெறாமல் எப்படி விக்கிபீடியா இப்படிச் செய்யலாம். இதனால் எனக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
டிரிக்கரை அழுத்தினால் ஆச்சா...
இதுகுறித்து ஸ்லேட்டர் கூறுகையில், புகைப்படம் எனக்கே உரிமையானது. கேமராவை குரங்கு கையில் எடுத்து டிரிக்கரை அழுத்தி புகைப்படம் எடுத்து விட்டால் அது எப்படி குரங்குக்குச் சொந்தமாக முடியும். இது அப்பட்டமான காப்பிரைட் விதி மீறல் என்று அவர் கூறியுள்ளார்.
குரங்குச் சேட்டை
மேலும் சம்பவத்தின்போது நடந்தது குறித்து அவர் கூறுகையில், நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பல குரங்குகள் அங்கு இருந்தன. அதில் ஒரு குரங்கு என்னை நோக்கி வந்து விளையாட்டை ஆரம்பித்தது. அங்குமிங்கும் தாவிய அது நான் புகைப்படம் எடுக்கத் தயாரானபோது எனது கேமராவைப் பறித்துக் கொண்டு விட்டது. அதைக் காட்டி மற்ற குரங்குகளை அது பயமுறுத்தியது. பின்னர் டிரிக்கரை அழுத்தி சரமாரியாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தது.
இதுதான் எனக்கு வாழ்க்கை
புகைப்படம் எடுத்துத்தான் நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆனால் ஒரு குரங்கு தெரியாமல் எடுத்த புகைப்படத்தை விக்கிபீடியா இப்படி குரங்குக்குச் சொந்தமாக்கி எனது பிழைப்பில் மண்ணைப் போட்டுள்ளது நியாயமற்றது. ஒரு வருட காலமாக இந்தப் புகைப்படங்களுக்காக நான் செலவிட்டுள்ளேன். எல்லாவற்றையும் கேலிக்கூத்தாக்கி விட்டது இந்த விக்கிபீடியா என்றார் அவர்.
விலங்குகள் படம் எடுத்தா யாருக்குச் சொந்தம்
இந்த வித்தியாசமான மோதல் வினோதமான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதர்கள் அல்லாதோர் படம் எடுத்தால் அது யாருக்குச் சொந்தம், காப்பிரைட் யாருக்கு என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.
விக்கிபீடியா சொல்வது என்ன
இந்த விவகாரம் குறித்து விக்கிபீடியா தரப்பில் கூறுவது என்னவென்றால், இது மனிதர்கள் எடுத்த புகைப்படம் அல்ல. எனவே இதற்கு மனிதர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அனைவருக்கும் இது உரித்தானது என்பது விக்கியின் வாதமாகும்.
செம போஸுப்பா...
இந்த சண்டையைத் தவிர்த்து விட்டு அந்தப் போட்டோவைப் பார்த்தால் அந்தக் குரங்கு அவ்வளவு அழகாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளதை ரசிக்கலாம்.. என்ன ஒரு சிரிப்பு.. !