சிங்கப்பூர் கலவரம்... தமிழருக்கு 15 வார சிறை- தண்டனைக்குள்ளான முதல் இந்தியர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் சின்னப்பா விஜயரகுநாத பூபதி என்ற 32 வயது நபருக்கு 15 வார சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 25 இந்தியர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ளனர். அதில் தற்போது முதல் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சாதாரண பிரிவில்
மிகவும் சாதாரணமான 151வது பிரிவின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட்டது. இதனால்தான் விஜயரகுநாத பூபதிக்கு குறைந்த அளவிலான தண்டனை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான பிரிவில் நடந்திருந்தால்
முன்னதாக அவர் மீது வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப் போடப்பட்டிருந்தது. அந்த பிரிவில் விசாரணை நடந்திருந்தால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், சவுக்கடியும் கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கும், கலவரத்திற்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பதால் சட்டப் பிரிவு சாதாரணமானதாக மாற்றப்பட்டது.
சின்னப்பா செய்த தவறு என்ன
லிட்டில் இந்தியா பகுதியில், கலவரம் நடந்த சமயத்தில் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்ற சின்னப்பாவும், மேலும் 10 பேரும் ஹோட்டலைத் திறக்கச் சொல்லி சத்தம் போட்டுள்ளனர். மது அருந்திய நிலையில் அப்போது சின்னப்பா இருந்ததாக தெரிகிறது. இதுதான் அவர்கள் செய்த குற்றம்.
டிசம்பர் 8ம் தேதி முதல்
கைது செய்யப்பட்ட டிசம்பர் 8ம் தேதி முதல் சின்னப்பாவின் சிறைத் தண்டனை நடைமுறைக்கு வரும் என்று நீதிபதி ஜெனீபர் மேரி தெரிவித்துள்ளார்.
40 ஆண்டு காலமாக இல்லாத கலவரம்
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8ம் தேதி பெரும் மோதல் வெடித்தது. ஒரு விபத்தைத் தொடர்ந்து நடந்த மோதலால் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 25 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பலர் நாடு கடத்தப்பட்டனர்.