இளவரசி டயானா திருமண கேக்கின் ஒரு துண்டு 1375 டாலருக்கு ஏலம்
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்&டயானா திருமணத்தின் போது அளிக்கப்பட்ட ஒரு கேக் துண்டு நேற்று அமெரிக்காவில் 82 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது. இது 1375 டாலராகும்.
இங்கிலாந்தில் கடந்த 1981ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.
5 அடுக்கு கேக்
வெகு விமரிசையாக நடைபெற்ற சார்லஸ் - டயானா திருமணத்தின் போது 5 அடுக்கு கோபுர வடிவ திருமண கேக் வெட்டப்பட்டது. அத்துடன் மேலும் ராணி குடும்பத்தினரால் மேலும் 22 வகையான கேக்குகள் முக்கிய பிரமுகர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
காரில் துரத்தல்
திருமணத்துக்கு பின்னர், இளவரசி டயானா தனது காதலருடன் காரில் சென்ற போது, அதை படம் பிடிக்க சில பத்திரிகையாளர்கள் இன்னொரு காரில் துரத்தினர். அப்போது டயானா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.
கேக் ஏலம்
இளவரசி டயானாவின் திருமணம் முடிந்து 33 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில், அவரது திருமணத்தின் போது பரிசளிக்கப்பட்ட ஒரு கேக், நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாதே டி சான்டர்ஸ் ஏல நிறுவனத்தினரால் ஏலம் விடப்பட்டது.
1375 டாலர் ஏலம்
அந்த கேக் துண்டை பெயர் குறிப்பிடாத ஒருவர் (ரூ.82 ஆயிரத்து 500க்கு) ஏலம் எடுத்தார். அந்த கேக் வெள்ளி சரிகையால் சுற்றப்பட்டிருந்தது. அதன் அட்டைப் பெட்டியில், ராணி குடும்பத்தினரின் வாழ்த்து இடம் பெற்றுள்ளது.
பத்திரப்படுத்திய பணியாளர்
அந்த கேக்கை தற்போதைய ராணியின் அம்மா ராணி எலிசபெத்திடம் பணியாற்றிய மோய்ரா சுமித் என்பவர் கெட்டுவிடாமல் பராமரித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதுவே தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
ராஜகுடும்பத்தின் நினைவு
ஏலத்தில் விடப்பட்ட கேக் சிறிய துண்டாக இருந்தாலும், சிலர் அதை ராஜகுடும்பத்தின் நினைவாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள் என்று ஏல நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சாம் ஹெல்லர் கூறினார்.
ராணி விக்டோரியா கேக்
இவர்களில் சிலர் 1840ஆம் ஆண்டில் ராணி விக்டோரியாவின் திருமணத்தின்போது வெளியிடப்பட்ட கேக்குகளைக் கூட வாங்கி சேகரிப்பில் வைத்துள்ளனர் என்றும் ஹெல்லர் தெரிவித்தார்.