செல்போன் திருடிய வழக்கு... குற்றம் சாட்டப்பட்ட வாலிபர்களின் கைகளை வெட்டிய பாக். போலீசார்
லாகூர்: செல்போன் மற்றும் மின்சாரப் பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட திருடர்களின் கைகளைப் போலீசார் வெட்டியதாக பாதிக்கப் பட்ட குற்றவாளிகள் தெரிவித்துள்ள தகவலால் பாகிஸ்தான் போலீசார் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வெகாரி மாவட்டத்தின் மாண்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் குல்லாம் முஸ்தாப்பா(வயது 30), லியாகாட் அலி (வயது28). இவர்கள் இருவர் மீதும் செல்போன் மற்றும் மின்சாரப் பொருட்களைத் திருடியதாக வழக்கு தொடரப் பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இடது கைகள் வெட்டப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று பஹாவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், குற்றம் சாட்டப் பட்டவர்கள் தாங்களாகவே தங்கள் கைகளை வெட்டிக் கொண்டதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இவ்விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் உண்டானது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவரின் ஒருவரது கை மணிக்கட்டு பகுதியில் வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்தோம். இருவரும் சம்பவம் நடந்து சுமார் 10 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் என்று மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் அவர்களது கையை வெட்டியுள்ளனர். ஆனால் திருடர்கள் தற்கொலை செய்து கொள்ள அவர்களாகவே கையை வெட்டி கொண்டனர் என போலீசார் கூறியுள்ளனர்' என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் போலீஸ் அதிகாரி சைதிக் அலி தோகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்தாப்பாவின் தந்தை, போலீசார் தங்களிடம் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனைத் தர மறுத்ததால் இத்தகைய பாவத்தை அவர்கள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாகாண முதல்வர் தலையிட்டு, போலீஸ் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் லியுறுத்தியுள்ளார்.