ரஷ்யாவின் விமானத் தாக்குதல் உதவியோடு ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் சிரியா ராணுவம்
டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யா நடத்தி வரும் விமானத் தாக்குதல்கள் உதவியுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் உக்கிர தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது.
சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ப்ரீ சிரியா ஆர்மி அமைப்புக்கு அமெரிக்கா முழு ஆயுத உதவி அளித்து வருகிறது.
அதேநேரத்தில் சிரியாவின் ரக்கா உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இந்நிலையில் சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. ரஷ்யா போர் விமானங்கள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள நகரங்கள் மீது உக்கிர தாக்குதலை நடத்தி வருகின்றன. மேலும் பல நூற்றுக்கணக்கான ரஷ்யா ராணுவ வீரர்களும் சிரியாவில் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த ஹமா பகுதியில் ரஷ்யா உக்கிர விமானத் தாக்குதல் நடத்த சிரியா ராணுவம் தரைவழியிலான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாவின் சில பகுதிகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகள் மீதும் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் உதவியுடன் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளிலும் சிரியா ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் சோர்ந்திருந்த சிரியா ராணுவத்துக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.