சிரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு – ராணுவ வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டல் தரைமட்டம்
பெய்ரூட்: சிரியாவில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் தரைமட்டமானது.
உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதிகளை மீட்க, அதிபர் ஆசாத்தின் அரசுப் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கிய வர்த்தக நகரமாக கருதப்படும் அலெப்போவின் ஒரு பகுதி புரட்சிப் படைவசம் உள்ளது. மற்ற பகுதி அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரை முழுவதும் கைப்பற்ற இரு தரப்பினரும் அவ்வப்போது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அரசுத் துருப்புகள் தங்கியிருக்கும் சார்ல்டன் ஹோட்டலை குறிவைத்து இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் அந்த ஹோட்டல் மற்றும் அருகில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய முன்னணி பொறுப்பேற்றுள்ளது. அதிபர் ஆசாத்தை வெளியேற்ற சண்டையிட்டு வரும் பல்வேறு இஸ்லாமிய குழுக்களில் இதுவும் ஒன்றாகும்.
இதற்கிடையே, ஹோம்ஸ் நகரில் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள, புரட்சிப் படையினர் இரண்டாவது நாளாக அங்கிருந்து தனது துருப்புகளை வெளியேற்றி வருகிறது. பின்னர் அங்கு ராணுவம் நுழைந்ததும், அப்பகுதி பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்படும் என்று கவர்னர் தெரிவித்தார்.