ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது யு.எஸ். தாக்குதலா?: சிரியா மறுப்பு
டமாஸ்கஸ்: சிரியாவின் அல்ரக்கா மாகாணத்தில் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாடு மறுத்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றிய நகரங்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அத்துடன் தங்களது இயக்கத்தின் பெயரை இஸ்லாமிய தேசம் என்றும் மாற்றியுள்ளனர்.
ஈராக்கின் சிஞ்சார் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் அப்பகுதியில் வாழ்ந்த சிறுபான்மை இனத்தவரை விரட்டியடித்தனர். அவர்கள் மதம் மாற மறுத்ததால் நூற்றுக் கணக்கில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிஞ்சார் மலைக்குன்றுகளில் யாஸிதிகள் பசியும் பட்டினியுமாக கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். இதனால் மிகப் பெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்க அமெரிக்கா படைகள் இஸ்லாமிய தேச படைகள் மீது வான் தாக்குதல்களை நடத்தின.
இத்தாக்குதல்களால் யாஸ்திகள் 45 ஆயிரம் பேர் பாதுகாப்பாக குர்திஷ் மாகாண பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் சிரியாவிலும் இஸ்லாமிய தேச படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது சிரியா இத்தகவலை மறுத்துள்ளது. சிரியாவின் அல் ரக்கா மாகாணத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.