லெபனானில்.. கடும் குளிரில் நடு நடுங்கித் தவிக்கும் சிரியா அகதிகள்
அர்சால், லெபனான் சிரிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு லெபனானில் வந்து தஞ்சமடைந்து தங்கியிருக்கும் சிரியர்கள், அங்கு தற்போது கடும் குளிர்காலம் என்பதால் குளிரிலும், பனியிலும் நடுங்கித் தவிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிரிய மக்கள் தொகையில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தற்போது அகதிகளாக லெபனானில் தஞ்சமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 20.3 லட்சம் பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள அர்சால் என்ற இடத்தில்தான் இவர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது கடும் குளிரும், பனியும் நிலவுவதால் அகதிகள் சொல்லொணாத் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.
குளிரில் நடு நடுங்கியபடி
கொட்டும் பனியிலும், உறைய வைக்கும் குளிரிலும் தனது குழந்தைகளுடன் பெரும் அவஸ்தையில் இருந்து வருவதாக அய்ஷா முகம்மது என்ற தாய் கவலையுடனும், கண்ணீருடனும் கூறுகிறார். தனது குழந்தைகளைக் காக்க கடுமையாக போராடுவதாகவும் அவர் கூறுகிறார்.
கொட்டகைக்குள் அனல் மூட்டி
உறைய வைக்கும் பனியிலிருந்து தன்னையும், குழந்தைகளையும் காக்க அவர் தான் தங்கியிருக்கும் பாடாவதியான கூடாரத்துக்குள்ளேயே அனல் மூட்டி கதகபப்பான சூழலை உருவாக்க முயற்சித்து வருகிறாராம்.
7 குழந்தைகளுடன்
அய்ஷாவுக்கு மொத்தம் 7 குழந்தைகள். இவர்களைக் காப்பதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகி விடுகிறது. இவர்கள் தங்கியுள்ள கூடாரம், குளிரைத் தாங்கும் வகையில்இல்லையாம். இவர் சிரியாவின் ரக்கா பகுதியைச் சேர்ந்தவர். 9 மாதங்களுக்கு முன்பு இந்த முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
3 வருடமாக தொடரும் போர்
சிரிய உள்நாட்டுப் போர் கடந்த 3 வருடமாக நடந்து வருகிறது. பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். இன்னும் பலர் அகதிகளாக வந்து குவிந்தபடியே உள்ளனர்.
எங்களால் முடியவில்லை
இதுகுறித்து ஐ.நா. அகதிகள் முகமை அதிகாரி ரோபர்டா ருஸ்ஸோ கூறுகையில், மிகப் பெரிய சவாலாக இது உள்ளது. தொடர்ந்து அகதிகள் வந்தபடியே உள்ளனர். இதனால் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக உள்ளது என்றார்.
குவியும் உதவிகள்
அதேசமயம், பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த சிரிய மக்களுக்கு உதவிகளும் குவந்தபடிதான் உள்ளது. போர்வைகள், பாய்கள், கெரசின் அடுப்புகள், குளிர்காலஆடைகள், பிளாஸ்டிக் தார்ப்பாய்கள், உணவு என வந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் எத்தனை வந்தும் கூட போதவில்லை என்ற நிலை.
லெபனான் ராணுவமும் உதவுகிறது
சிரிய அகதிகளுக்கு லெபனான் நாட்டு ராணுவம் பெருமளவில் உதவி புரிந்து வருகிறதாம். ஜீப்புகளில் உதவிப் பொருட்களை அவர்கள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
மின்சாரத்தை கொடுக்கும் உள்ளூர் மக்கள்
உள்ளூர் லெபனான் மக்கள், அகதிகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். டிவி பெட்டிகளையும் தானமாக கொடுக்கின்றனர். பலர் ஹீட்டர்களையும் கொடுத்து உதவுகின்றனர்.
பனிப்புயலால்.. ஹெலிகாப்டர் உதவிகளில் பாதிப்பு
தற்போது அப்பகுதியில் கடும் பனிப் புயல் வேறு வீசி வருவதால், உதவிப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் கொடுக்கும் பணியில் பாதிப்புஏற்பட்டுள்ளதாம்.
துருக்கியில்
இதேபோல துருக்கியிலும் பெரும் அளவிலான சிரிய அகதிகள்அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையானதை துருக்கி வெளியுறவு அமைச்சகம் செய்து தருகிறது. ஆனால் அங்கும் குளிரும், பனியும் வாட்டி வதைப்பதால்அவர்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஷூவை எரித்து குளிர் காயும் முதியவர்
மரியம் அல் ஹமத் என்ற 52வயது முதியவர் குளிர் தாங்க முடியாமல் தனது ஷூக்களை எரித்துக் குளிர் காயும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரது கணவர் இரு கால்களையும் போரில் இழந்தவராம்.
குளிரில் உறையும் தண்ணீர்
கடும் குளிர் பனி காரணமாக இப்பகுதியில்நீர் நிலைகள் அனைத்தும் உறைந்து ஐஸ் கட்டிகளாகியுள்ளன. அதை எடுத்து சூடுபடுத்தித்தான் தண்ணீராக்கி குடிக்கின்றனராம் இங்குள்ள அகதிகள்.
உதவி கிடைக்காமல் தவிப்போரும் ஏராளம்
இவர்கள்நிலைஇப்படி என்றால், இன்னும் உதவிகள் எதுவும் கிடைக்காமல் தவிக்கும் அகதிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளதாம்.