பிகினி ஆடை பற்றிய கருத்துக்கு பிரஸ் மீட் வைத்து மன்னிப்பு கேட்ட தாய்லாந்து பிரதமர்!
பேங்காக்: பிகினி ஆடை அணிந்தால் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று தான் கூறிய கருத்தை திரும்ப பெற்றுள்ள தாய்லாந்து பிரதமர், பிரயுத் சன்-ஒசா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் என்ற 23வயது பெண்ணும், டேவிட் மில்லர் என்ற 24வயது நண்பரும் தாய்லாந்து நாட்டின் கோ-டாவ் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். சுற்றுலா சென்ற இடத்தில் தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டன் அரசு, தாய்லாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.
இதனிடையே, "அழகாக இல்லாதவர்களுக்கு பிகினி ஆடை பாதுகாப்பாக இருக்கலாமே தவிர பிறருக்கு பிகினி உடை பாதுகாப்பானதாக இருக்காது" என்று பிரயுத் சன்-ஒசா, போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரயுத் சன்-ஒசா, தனது கருத்தை திரும்ப பெறுவதாகவும், அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ராணுவ தளபதியாக இருந்த பிரயுத் சன்-ஒசா, புரட்சி மூலமாக ஆட்சியை பிடித்து கடந்த மாதம்தான் பிரதமரானவர். ராணுவ புரட்சி காரணமாக தாய்லாந்தில் சுற்றுலா நலிவடைந்துவிட்டது. பிரிட்டீஷ் ஜோடி கொலையானதும், பிரதமரின் கருத்தும் தாய்லாந்தின் சுற்றுலா துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே பிரிட்டீஷ் ஜோடி கொலை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தாய்லாந்து போலீசார் திணறிவருகின்றனர்.