இன்டர்வியூவுக்கு போகிறீர்களா?: அங்கு இதை எல்லாம் சொல்லிவிடாதீர்கள்
சென்னை: வேலைக்கான நேர்காணலில் சொல்லக் கூடாத விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வேலை கிடைப்பது தற்போது புளியங்கொம்பாக உள்ளது. என்ன தான் படித்தாலும் நல்ல வேலை கிடைக்க படாதபாடுகிறார்கள் இன்றை இளைஞர்கள்.
வேலைக்கு விண்ணப்பித்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குள் பலருக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. அப்படியும் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு சென்றால் அங்கு நச்சென்று பதில் கூறி வேலையை வாங்குவது சாதாரண காரியம் அல்ல. இந்நிலையில் நேர்காணலின்போது என்னவெல்லாம் கூறக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
லீவு
நேர்காணலில் எடுத்த எடுப்பிலேயே ஒரு ஆண்டில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எத்தனை உள்ளது என்று கேட்காதீர்கள்.
பதற்றம்
நேர்காணல் காண்பவர்களிடம் இங்கு அமர்ந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் எனக்கு பதற்றமாக உள்ளது என்று மட்டும் சொல்ல வேண்டாம்.
சம்பளம்
நேர்காணலின் துவக்கத்திலேயே சம்பளத்தை பற்றி பேசாதீர்கள். பேசினால் இவன் என்ன பணத்திலேயே குறியாக இருக்கிறான். வேலையை பற்றி கண்டுகொள்ள மாட்டேன் என்கிறானே என நினைத்துவிடுவார்கள்.
வீக்
உங்களுடைய வீக் பாயிண்டுகளை நீங்களே உளறிக் கொட்டிவிடாதீர்கள். அது உங்களை நிராகரிக்க வசதியாகிவிடும்.
கண்டிப்பாக
என் சூழல் அப்படி. அதனால் எனக்கு இந்த வேலை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பதை சூசகமாகக் கூட நேர்காணலில் கூறாதீர்கள்.
பாஸ்
நேர்காணலில் உங்களுடைய தற்போதைய பாஸ் குறித்து போட்டு வாங்குவார்கள். அவசரப்பட்டு என் பாஸ் இருக்காரே என்று அவரின் குறைகளை அடுக்கிவிடாதீர்கள். அப்படி கூறினால் உங்களைப் பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும்.
அவசரம்
நேர்காணலின்போது காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டது போன்று அங்கிருந்து கிளம்ப அவசரப்படாதீர்கள்.
திட்டு
நேர்காணலின்போது கெட்ட வார்த்தைகள் பேசுவது, யாரையாவது திட்டுவது போன்றதை செய்தால் அந்த வேலை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.
பிரச்சனை
நேர்காணலின்போது உங்களின் சொந்த பிரச்சனைகள் பற்றி கண்டிப்பாக பேச வேண்டாம். அப்படி பேசினால், இவனுக்கு இத்தனை பிரச்சனை உள்ளபோது எப்படி வேலையில் கவனம் செலுத்துவான் என்று எண்ணத் தோன்றும்.
இல்லை
நேர்காணலின் முடிவில் உங்களிடம் பல கேள்விகளை கேட்டவர்கள் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா என்றால் உடனே இல்லை என்று கூறாதீர்கள். அப்படி கூறினால் நீங்கள் நேர்காணலுக்கு தயார்நிலையில் வரவில்லை ஏன் அந்த வேலை, நிறுவனத்தை பிடிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்படும்.