குடிக்க நீர் இல்லாமல் 9 நாட்களாக அல்லாடும் 3 மில்லியன் சிரிய மக்கள்
டமாஸ்கஸ்: போராளிகள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்திவிட்டதால் 3 மில்லியன் சிரியர்கள் குடிக்க நீரில்லாமல் 9 நாட்களாக வாடி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவின் பாதி பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும், மீதிப்பகுதி போராளிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அலெப்போவில் உள்ள இரண்டு முக்கிய நீர் இறைக்கும் நிலையங்கள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டனர்.
இதனால் தொடர்ந்து 9 நாட்களாக குடிக்க நீரில்லாமல் 3 மில்லியன் சிரியர்கள் தவித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் அலெப்போவின் முக்கிய குடிநீர் ஆதாரமான சுலைமான் அல் ஹபீபி நிலையத்தில் இருந்து நீர் எடுக்க அனுமதி மறுத்துள்ளனர். இதனால் நகரில் 9 நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அலெப்போவை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்போம் என்று போராளிகள் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் சபதம் எடுத்த பிறகு அந்த நகரம் முக்கிய போர்க்களமாகிவிட்டது.