கேன்சரால் கணவர் பலி... மனைவிக்கு சிகரெட் நிறுவனம் ரூ. 1.4 லட்சம் கோடி இழப்பீடு தர கோர்ட் உத்தரவு!
நியூயார்க்: அதிகளவு சிகரெட் குடித்ததால் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தவரின் மனைவிக்கு சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனம் ரூ. 1.4 லட்சம் கோடி இழப்பீடு தர வேண்டும் என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவரது கணவர் மைக்கேல் ஜான்சன் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் நுரையீரல் புற்று நோய் பாதித்து, கடந்த 1996-ம் ஆண்டு மரணம் அடைந்தார் மைக்கேல்.
அதிக சிகரெட் குடித்ததால் தான் தனது கணவர் மரணமடைந்ததாக குற்றம் சாட்டிய சிந்தியா, அமெரிக்காவின் 2-வது பெரிய சிகரெட் கம்பெனியான ஆர்.ஜெ.ரெனால்ட்ஸ் நிறுவனம் மீது நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனம் சிந்தியா ராபின்சனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்கும்படி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வில்லை. இத்தீர்ப்பு அனைத்து சிகரெட் கம்பெனிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமையும் என அத்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இருப்பதாக சிகரெட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.