விபத்தில் கணவனும், மகளும் பலி- வீட்டில் மனைவி பலி: ஓமனில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!
மஸ்கட்: ஓமனில் தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள சோஹர் இரும்பு ஆலையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
அங்குள்ள இந்தியப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் தனது மகளுடன் நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்தபோது டேங்கர் லாரியின் மீது அந்த கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவருமே பரிதாபமாக பலியாகினர்.
மனைவிக்குத் தகவல்:
இதுபற்றிய தகவலறிந்த அவரது நண்பர்கள் மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று, இறந்தது அந்த நபர்தான் என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகு, அவரது மனைவிக்கு தகவல் சொல்வதற்காக போன் செய்தனர்.
போனை எடுக்காத மனைவி:
ஓமனில் உள்ள எல் அண்ட் டி கம்பனியில் பணியாற்றும் அந்தப் பெண், வெகுநேரம் வரை செல்போனை எடுத்துப் பேசவில்லை.
மனைவியும் பலி:
தொடர்ந்து போன் செய்துப் பார்த்து விரக்தியான அவரது நண்பர்கள், இறந்தவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டினுள் அந்தப் பெண் பிணமாக கிடந்ததாக ஓமன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவரங்கள் தெரியவில்லை:
அந்த குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள ஓமன் ஊடகங்கள் அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பெயர், விபரம் ஆகியவற்றை வெளியிடவில்லை. இச்சம்பவம் ஓமனிலும், தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.