மலேசிய விமானத்தில் பலியானோரின் உடல்கள் உக்ரைன் நகருக்கு வந்து சேர்ந்தன!
கார்கிவ், உக்ரைன்: மலேசிய விமான தாக்குதல் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அடங்கிய ரயில், உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் என்ற நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.
மலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீ்ழ்த்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை ரஷ்ய ஆதரவுப் படையினர் மீட்டு ரயில் மூலம் உக்ரை் அரசுத் தரப்பு நகருக்கு அனுப்பி வைத்தனர். இந்த ரயில் தற்போது கார்கிவ் நகருக்கு வந்துள்ளது.
கார்கிவ் நகரில் உள்ள ஆயுதக் கிட்டங்கி தொழிற்சாலைக்குள் ரயில் வந்து சேர்ந்துள்ளது. இங்கிருந்து உடல்கள் இறக்கப்பட்டு விமானம் மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதற்காக நெதர்லாந்து குழு ஒன்று கார்கிவ் வந்துள்ளது. மலேசிய விமான விபத்தில் 295 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நெதர்லாந்து நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விமானத்தின் கருப்புப் பெட்டியை மலேசிய அதிகாரிகளிடம் புரட்சிப் படையினர் ஏற்கனவே ஒப்படைத்து விட்டனர்.