காஸாவில் அகதிகள் தங்கியிருந்த ஐ.நா. பள்ளிகள், சந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வெறியாட்டம்!!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் அகதிகள் தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக் கூடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் சந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த வெறியாட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஸாவில் 23வது நாளாக நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதுவரை மொத்தம் 1,400 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். லட்சக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கலமாகி இருக்கின்றனர்.
இத்தகைய கோர தாண்டவத்தையும் நடத்தி விட்டு காஸாவின் சில பகுதிகளில் மட்டும் சில மணி நேர யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸாவின் தற்போதைய நிலைமை என்ன?
- வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சுமார் 2 லட்சம் காஸாவாசிகள் ஐ.நா. நடத்தும் பள்ளிகளில் தங்கியுள்ளனர்.
- மொத்தம் 85 பள்ளிக் கூடங்கள் மற்றும் அகதிகள் முகாம்களில் காஸ்வாசிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களும் பள்ளிக் கூடங்களும் நிரம்பி வழிகின்றன.
- பல்லாயிரக்கணக்கானோர் தங்க இடமும், குடிக்க குடிநீரும் உண்ண உணவும் இல்லாமல் இஸ்ரேலின் குண்டு மழைகளுக்கு நடுவே வீதிகளில் தங்கியுள்ளனர்.
- இத்தனை லட்சம் பேருக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐநா போராடி வருகிறது. சர்வதேச மனிதாபிமான உதவிகளுக்காக லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் காத்திருக்கின்றனர்.
இஸ்ரேல் நடத்திய வெறியாட்டம் இது..
- கடந்த 23 நாட்களாக காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் இரவும் பகலுமாக குண்டு மழைகளை பொழிந்து வருகிறது.
- தரைவழியே டாங்கிகள் மூலம் ஷெல்களை ஏவி கொடுந்தாக்குதலை நடத்தி வருகிறது.
- இஸ்ரேலின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,400; படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது;
- அகதிகளாக இடம்பெயர்ந்து அடைக்கலமாகியிருக்கும் பள்ளிக் கூடங்களையும் கூட இஸ்ரேல் விட்டு வைக்கவில்லை.
பள்ளிகள், சந்தைகளை இலக்கு வைக்கும் இஸ்ரேல்
- கடந்த 24-ந் தேதி ஐ.நா. நடத்தும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- இதேபோல் நேற்று முன் தினம் மீண்டும் அகதிகள் தங்கியிருந்த மற்றொரு பள்ளிக் கூடத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
- பெற்றோருக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை ஒன்றும் துடிதுடித்து உயிரிழந்த கொடூரம் நடந்தேறி இருக்கிறது.
- பள்ளிக்கூடத்தின் மீதான வெறியாட்டத்தை நடத்திய கையோடு பொதுமக்கள் கூடும் சந்தை ஒன்றையும் இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- இந்த சந்தையில் குவிந்திருந்த பொதுமக்களில் 17 பேர் பலியாகினர்.
- சந்தையில் மக்கள் குவிந்திருந்ததை படம் பிடித்துக் கொண்டிருந்த பாலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவரும் உயிரிழந்தார்.
பாலஸ்தீனத்தில் அகதிகளுக்கு உதவி வரும் ஐ.நா. பிரதிநிதி பியர்ரி கிரஹென்புல் சொல்வது என்ன?
- இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பள்ளிக்கூடத்தில் மொத்தம் 3,300 பேர் அகதிகளாக தங்கியிருந்தனர்.
- இந்த பள்ளிக்கூடத்தில் அகதிகள் தங்கியுள்ளனர் என்று 17 முறை இஸ்ரேல் தரப்புக்கு தகவல் கொடுத்திருக்கிறோம்.
- பள்ளிக் கூடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புகூட இஸ்ரேலிடம் இங்கே அகதிகள் தங்கியிருக்கிறார்கள் என்று எச்சரித்தோம்.
- இத்தனை எச்சரிக்கைகளையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
- இப்படி அகதிகள் தங்கியிருக்கும் பள்ளிக் கூடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது 6வது முறை.
- இஸ்ரேலின் தாக்குதல்கள் அப்பட்டமாக சர்வதேச சட்டங்களை மீறியவைதான்.
- இத்தகைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் காஸாவில் பெரும் மனிதப் பேரவலம் நிகழும்.
- சர்வதேச சமூகம் உடனடியாக இதில் தலையிட்டு உடனே காஸா மீதான யுத்தத்தை நிறுத்த வேண்டும்.