எபோலா வைரஸை கட்டுப்படுத்த 3,000 ராணுவத்தினரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் அமெரிக்கா
வாஷிங்டன்: எபோலாவை எதிர்த்து போராட மேற்கு ஆப்பிரிக்காவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரத்து 784 பேருக்கும் மேற்பட்டோர் அவதிப்படுகின்றனர். அதில் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் அதிகமானோர் லைபீரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி
எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவி செய்யுமாறு லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் கேட்டார்.
அமெரிக்க ராணுவம்
எபோலாவை எதிர்த்து போராடும் சர்வதேச குழுக்களுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவம் 3 ஆயிரம் பேரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது. இதற்கு ஆபரேஷன் யுனைடெட் அசிஸ்டன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெனரல்
அமெரிக்க ராணுவ ஜெனரல் இந்த வார இறுதியில் லைபீரிய தலைநகர் மான்ரோவியாவுக்கு சென்று ஆபரேஷன் யுனைடெட் அசிஸ்டன்ஸ் துவங்துவதற்கான வேலையில் ஈடுபட உள்ளார்.
மான்ரோவியா
மான்ரோவியாவில் தலைமை அலுவலகம் அமைத்து அமெரிக்க ராணுவம் செயல்படும். அவர்கள் மருத்துவ மையங்களை கட்ட, சுகாதாரத்றை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உதவி செய்வார்கள்.
பயிற்சி மையம்
எபோலா நோயாளிகளை கவனிக்கும் பயிற்சி அளிக்கும் மையம் துவங்கப்பட உள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 500 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.