குலுக்கலில் ஜெயித்தால் 'ரூம் + கும்மாளம்' இலவசம்: இங்கிலாந்தைக் கலக்கும் ‘செக்ஸ் லாட்டரி’
லண்டன்: லாட்டரியில் ஜெயித்தால் பணம், பொருட்கள் போன்றவை பரிசு என அறிவித்தது எல்லாம் பழைய பேஷனாகி விட்டது. தற்போது லண்டனில் மக்களைக் கவரும் வகையில் புதிய உக்தியாக ‘செக்ஸ் லாட்டரி' என்ற வித்தியாசமான ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
லாட்டரிகளில் பலவிதம் உண்டு. ஆனால், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை வீணடித்து விடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் சில நாடுகளில் லாட்டரிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் ஒன்று புதிய ‘செக்ஸ் லாட்டரி' என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த லாட்டரியில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கிலாந்தின் பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி, அவர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பளிப்பதாக அந்த இணையத் தளம் அறிவித்துள்ளது.
செக்ஸ் லாட்டரி அறிமுகம்...
கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தின் பிரபலமான டேட்டிங் இணைய தளமான பார்கெட் டின்னர் தான் இந்த புதிய ‘செக்ஸ்' லாட்டரியை அறிமுகப் படுத்தியுள்ளது.
உறுப்பினர்களை அதிகரிக்க....
தற்போது இந்த இணைய தளத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த இணையதளம் முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளது.
குலுக்கலில் தேர்வு....
இதன்படி, முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்கள் இந்த குலுக்கலில் பங்கு பெறலாமாம். அதனைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜாக்பாட்....
வெற்றி பெற்றவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக, இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் சகல வசதிகளுடன் கூடிய அறை ஒன்று அவர்களுக்காக ஒதுக்கித் தரப் படுமாம். அதற்கான செலவை இணைய தளமே ஏற்றுக் கொள்ளும்.
11 ஆயிரம் பேர் பதிவு....
இதற்கான பதிவையும் இணைய தளம் இலவசமாக வழங்குவதால் ஏராளமான இளைஞர், இளம்பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றனராம்.இதுவரை 11 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்பு....
இதுதொடர்பாக இணைய தளத்தின் நிறுவனர் ஹோவர்ட் ஜேம்ஸ் கூறுகையில், ‘இங்கிலாந்திலேயே முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாட்டரிக்கு கிடைத்த வரவேற்பு எங்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதுவரை 11 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.