ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முக்கிய ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்!!
கிவீ: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் அதிரடியாக ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா ஆதரவு அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் நிராகரித்திருந்தார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் கிளர்ச்சி வெடித்தது. இதனால் யானுகோவிச் தமது பதவியை இழக்க நேரிட்டது. அதன் தொடர்ச்சியாக கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்தது. கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி வெடித்தது.
ரஷ்யா எச்சரிக்கை
அண்மையில் கூட, 15 நாட்களுக்குள் உக்ரைன் தலைநகர் கிவீயை எங்களால் கைப்பற்ற முடியும் என்று ரஷ்யா அதிபர் எச்சரித்திருந்தார்.
தீவிர முயற்சிகள்
இந்த பிராந்தியத்தில் பெரிய அண்ணனாக இருக்கும் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான முயற்சிகளை அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ மேற்கொண்டு வந்தார்.
நாடாளுமன்றம் ஒப்புதல்
இதன் முதல் கட்டமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் உக்ரைன் - ஐரோப்பிய ஒப்பந்தத்துக்கும் அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
இனி உக்ரைன் ஐரோப்பிய நாடு
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக உக்ரைன் ஆவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 355 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
யாரும் எங்களை தடுக்க முடியாது
இதுகுறித்து அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறுகையில், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதை இனி யாராலும் தடுக்க முடியாது. ஐரோப்பிய நாடாவதற்கான முதல் அடியை, உக்ரைன் இன்று உறுதியாக எடுத்து வைத்துள்ளது என்றார்.