காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிடம் ஒபாமா, ஐ.நா. வலியுறுத்தல்
ரமல்லா: பாலஸ்தீனத்தின் காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்கா அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். இதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையும் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
காஸா பகுதிகள் மீது கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் யுத்தத்தை நடத்தி வருகிறது. காஸாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகி இருக்கின்றனர்.
2 யுத்த நிறுத்தம்
இந்த நிலையில் முதலில் 5 மணி நேர யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் சனிக்கிழமையன்று 12 மணி நேர யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த யுத்த நிறுத்தம் முழுமையா கடைபிடிக்கப்படவில்லை.
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் மீண்டும் உக்கிர தாக்குதலை மேற்கொண்டது. ஹமாஸ் இயக்கம் ராக்கெட்டு தாக்குதல் நடத்தியதாலேயே பதிலடி கொடுத்தோம் என்கிறது இஸ்ரேல்.
ஜான்கெர்ரி மீது காட்டம்
இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மேற்கொண்டு வரும் அமைதி முயற்சியை இஸ்ரேல் விரும்பவில்லை; ஜான் கெர்ரி ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று இஸ்ரேல் ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
ஒபாமா பேச்சு
இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்கா அதிபர் ஒபாமா, காஸா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். காஸா மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒபாமா மூன்றாவது முறையாக பேசியுள்ளார்.
ஐ.நா. வலியுறுத்தல்
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று வெளியிட்ட அறிக்கையிலும் கூட, மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் யுத்த நிறுத்தம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தும் நடத்தி அப்பாவி பாலஸ்தீனர்களை பலியெடுத்துக் கொண்டிருக்கிறது.