ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் தான் தவறுதலாக மலேசிய விமானத்தை தாக்கியிருப்பார்கள்: அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் தான் பயணிகள் விமானம் என்று தெரியாமல் மலேசிய விமானத்தை தவறுதலாக தாக்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது.
நெதர்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
விமானம் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் பிடியில் உள்ள இடத்தில் விழுந்தது.
ஆதாரம்
விமானத்தை ரஷ்ய ஆதரவு புரட்சிப்படை தான் தாக்கியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்தது.
தவறுதலாக
ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் பயணிகள் விமானம் என்று தெரியாமல் தவறுதலாக மலேசிய விமானத்தை தாக்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது.
ஏவுகணை
விமானத்தை தாக்க பயன்படுத்தப்பட்ட எஸ்.ஏ.-11 ஏவுகணை ரஷ்யாவில் செய்யப்பட்டது. அந்த ஏவுகணையை ரஷ்யா தான் ஆதரவுப்படைக்கு கடந்த மாதம் அளித்துள்ளது.
பயிற்சி இல்லை
எஸ்.ஏ.-11 ஏவுகணையை ஏவ சிறப்பு பயிற்சி வேண்டும். அப்படி பயிற்சி இல்லாதவர்கள் தான் ஏவுகணையை ஏவியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புரட்சிப்படை
விமானம் தாக்கப்பட்டபோது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தான் ஏவுகணையை வீசினர் என்பதற்கான ஆதாரம் அமெரிக்க உளவுத்துறையிடம் இல்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.