அமெரிக்க மருத்துவமனையில் ஒரு அதிரடி சண்டை- ஊழியரை சுட்ட நோயாளி.. அவரை சுட்டு வீழ்த்திய டாக்டர்!
டர்பி, பிலடெல்பியா: அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சினிமாவை மிஞ்சும் வகையில் நிஜத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையைக் கண்டு அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தின் டர்பி நகரில் ஒரு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் டாக்டரை சுட முயன்றார். இதில் 53 வயதான மருத்துவமனை பெண் ஊழியர் சிக்கி உயிரிழந்தார்.
அதே சமயம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக டாக்டர் துப்பாக்கியை எடுத்து அந்த நோயாளியைச் சுட்டுள்ளார். இருவருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததால் மருத்துவமனையே பரபரப்பானது.
மனநல மருத்துவர்...
அந்த டாக்டரின் பெயர் லீ சில்வர்மேன். மன நல மருத்துவர். நோயாளியின் பெயர் ரிச்சர்ட்ஸ் பிளாட்ஸ். சுட்டுக் கொல்லப்பட்ட ஊழியரின் பெயர் தெரசா ஹன்ட். இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது டர்பியில் உள்ள மெர்சி பிட்ஜெரால்ட் மருத்துவமனையில்.
ஊழியர் பலி...
சம்பவத்தன்று ஊழியர் தெரசா, நோயாளி பிளாட்ஸை டாக்டர் சில்வர்மேனின் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு போனதும் திடீரென பிளாட்ஸ் துப்பாக்கியை கையில் எடுத்தார். இதைப் பார்த்த தெரசா, அவரைத் தடுக்க முயன்றார். ஆனால் தனக்கு நெருக்கத்தில் இருந்த தெரசாவை சுட்டு விட்டார். இதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
மறைந்திருந்து தாக்குதல்...
இதைப் பார்த்த டாக்டர் டக்கென்று டேபிளுக்குக் கீழே போய் விட்டார். மேலும டேபிள் டிராயரில் வைத்திருந்த தனது துப்பாக்கியை எடுத்தார். மேலே நிமிர்ந்த அவர் பிளாட்ஸை நோக்கி சுட்டார். பதிலுக்கு பிளாட்ஸும் சுட்டார். இருவரும் மாறி மாறி சுட்டனர். ஆனால் யார் மீதும் குண்டு பாயவில்லை.
போலீசுக்குத் தகவல்...
இதற்குள் அங்கு மருத்துவர்களும், ஊழியர்களும் கூடி விட்டனர். டாக்டர் சில்வர்மேனுக்கு ஆதரவாக இன்னொரு டாக்டரும், ஊழியரும் பிளாட்ஸை சூழ்ந்து அவருடன் போராட்டம் நடத்தி கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரை அமைதிப்படுத்தினர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது.
காரணம்...
துப்பாக்கிச் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. டாக்டரின் சிகிச்சை முறையில் திருப்தி இல்லாமல் பிளாட்ஸ் இப்படி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கத்தி பிடிக்கும் கையில் துப்பாக்கியா....?மேலும், ஊழியர் பலியான இந்தத் தாக்குதலில் மருத்துவர் எப்படி மருத்துவமனையில் துப்பாக்கியை கொண்டு வந்தார் என்ற புதிய சர்ச்சை தற்போது உருவெடுத்துள்ளது. இது மருத்துவமனை விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் கூறப்படுகிறது.
விசாரணை...
குறிப்பாக மருத்துவமனையில் பாதுகாவலர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க சட்டத்தில் இடம் உள்ளதாம். ஆனால் டாக்டர் துப்பாக்கி வைத்திருந்ததால், முன்கூட்டியே அவருக்கும் பிளாட்ஸுக்கும் இடையே மோதல் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சட்டவிரோதம்...
அதேசமயம், டாக்டர் தனது துரிதமான செயல்பாட்டால் பலரின் உயிர்களைக் காத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் துப்பாக்கி வைத்திருந்தது சட்டவிரோதமானதுதான் என்றாலும் கூட அவர் செயல்பட்ட விதம்தான் பலரது உயிர்களைக் காக்கக் காரணம் என்கிறார்கள் போலீஸார்.