அமெரிக்க பிணைக் கைதி சிரியாவில் விடுதலை.. பணம் கொடுத்து மீட்டதா அமெரிக்கா?
வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி மிகக் கொடூரமாக தலை துண்டித்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்க பிணைக் கைதி ஒருவரை அல் கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்பிடமிருந்து மீட்டுள்ளது அமெரிக்கா.
சிரியாவில் வைத்து தியோ கர்ட்டிஸ் என்ற அந்தப் பிணைக் கைதியை தீவிரவாத அமைப்பு விடுவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ட்டிஸ் மீண்டு வந்துள்ளார். இதை அமெரிக்க அரசும், கர்ட்டிஸின் உறவினர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பீட்டர் தியோ கர்ட்டிஸ் என்ற முழுப் பெயர் கொண்ட அவர் மாசசூசட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இப்போது அவர் சிரியாவை விட்டு வெளியேறி விட்டார். அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா உதவியுடன்
ஐ.நாவின் உதவியால் கர்ட்டிஸை மீட்டுள்ளதாம் அமெரிக்கா. ஐ.நா. அமைதிப் பேச்சாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கர்ட்டிஸை அவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன குன்றுகள் பகுதியில் உள்ள கிராமத்தில் வைத்து ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் கர்ட்டிஸ், அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எப்படிக் கடத்தல் .. எதற்காக விடுதலை!
கர்ட்டிஸ், எப்படிக் கடத்தப்பட்டார், எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களை யாரும் வெளியிடவில்லை. மேலும் எந்தக் காரணத்திற்காக கர்ட்டிஸ் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரியவில்லை.
ஜபாத் அல் நுஸ்ரா
கர்ட்டிஸை ஜபாத் அல் நுஸ்ரா என்ற அமைப்பினரால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். இது அல் கொய்தா அமைப்பின் ஒரு பிரிவாகும். சிரியாவில் மட்டும் இது உள்ளது.
போலி கொலைக்குப் பின்னர்
சமீபத்தில்தான் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அவரை விடுவிக்க ரூ. 600 கோடிக்கு மேல் பணம் கேட்டனர் தீவிரவாதிகள். ஆனால் அமெரிக்க அரசு பணம் தரமுடியாது என்று கூறியதோடு போலியை மீட்கவும் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து போலியை தலை துண்டித்து தீவிரவாதிகள் கொன்று விட்டனர்.
பணம் கொடுக்கப்பட்டதா
இந்த நிலையில் தற்போது சிரியாவிலிருந்து அமெரிக்க பிணைக் கைதி ஒருவர் விடுதலையாகியுள்ளார். இவர் விடுதலையாகியிருப்பதால் பணம் கொடுத்து மீட்கப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அடுத்தடுத்து அமெரிக்கர்கள் கொலையானால் அது உள்நாட்டில் அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்பதால் அதைத் தவிர்க்க ஒபாமா அரசு பணம் கொடுத்திருக்க வாய்ப்புண்டு என்றும் பேச்சுக்கள் உள்ளன.