காப்பீடு திட்ட துஷ்பிரயோகம்! ஒபாமாவுக்கு எதிராக வழக்கு: நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த அந்த நாட்டின் விதிமுறை கமிட்டி ஒப்புதல் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் வழக்கு தொடர ஆதரவு அளிக்கும்பட்சத்தில் ஒபாமா சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
ஒபாமா கேர்
அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவேற்பு இல்லை
நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையவில்லை. இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய மருத்துவக் காப்பீடுகள் காலாவதியாவதாக அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. இதன்காரணமாக அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கு தொடர முடிவு
இந்நிலையில், ஒபாமா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடுக்க குடியரசு கட்சி திட்டமிட்டுள்ளது. அதிபர் மீது வழக்கு தொடர அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர் ஒப்புதல் தேவை. எனவே நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை வாக்கெடுப்புக்கு விட வேண்டியது அவசியம்.
சட்ட வல்லுநர்கள் சம்மதம்
வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு இது தகுதியான பிரச்சினைதானா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் விதிமுறை கமிட்டியிடம் அளிக்கப்பட்டது. அதிலுள்ள சட்ட வல்லுநர்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த இது தகுதியான பிரச்சினைதான் என்று அறிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் வாக்கெடுப்பு
எனவே அடுத்தவாரத்தில் ஒட்டுமொத்த சபையும் வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார திட்டத்திற்கு அதிபரை பொறுப்பாக்குவதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்று குடியரசு கட்சியினர் கூறினாலும், இதை தேர்தல் ஆண்டின் 'ஸ்டன்ட்' என்று ஜனநாயக கட்சி வர்ணிக்கிறது.
நீதிபதி முடிவு
தொழில்நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு உரிய நடைமுறைகளை செய்து கொடுக்காமல் ஒபாமா காலம் தாழ்த்திவிட்டதை கண்டித்து இந்த வழக்கு தொடுக்கப்பட உள்ளதாக குடியரசு கட்சி தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தின் மொத்த சபையும் இந்த வழக்குக்கு ஆதரவாக வாக்களிக்கும்பட்சத்தில் பெடரல் நீதிபதிக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கை ஏற்பதா இல்லையா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.