"படிப்படியாக அடி"... 2016க்குள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்கா முடிவு!
வாஷிங்டன்: ஒரு வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மீது பட்டும் படாமல் இருந்து வந்த அமெரிக்கா தற்போது அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டும் முடிவுக்கு வந்து விட்டது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அதி வேகமாக ஈராக் நகரங்களை விழுங்கி வந்தபோதெல்லாம், அதுகுறித்து ஈராக் அரசு உதவி கோரி கதறியபோதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்த அமெரிக்கா, இன்று அடுத்தடுத்து 2 அமெரிக்கர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்று குவித்ததைத் தொடர்ந்து கோபம் கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதற்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கானோரை கொடூரமாகக் கொன்று குவித்தபோதெல்லாம் அது அமைதி காத்து வந்தது என்பது நினைவிருக்கலாம்.
யாஸிதி சிறுபான்மையினரையும், கிறிஸ்தவர்களையும் தீவிரவாதிகள் கொல்ல ஆரம்பித்த பிறகுதான் அமெரிக்காவுக்கும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கும் சற்று கோபம் வந்தது. இப்போது 2 அமெரிக்கர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதும், அமெரிக்காவுக்கு முழுக் கோபம் வந்து விட்டது.
3 வருடங்களில் காலி செய்யத் திட்டம்
தற்போது ஒபாமா நிர்வாகம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தீவிரமான தாக்குதலுக்குத் திட்டமிடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வேட்டையை 3 வருடங்களில் முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதாவது ஒபாமா பதவியில் நீடிக்கும் வரை
அதாவது ஒபாமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த நடவடிக்கையை முடிக்கத் திட்டமிட்டு வருகிறார்களாம். இன்னும் சொல்லப் போனால் ஒபாமா பதவிக் காலம் முழுமைக்கும் இந்த வேட்டை தொடரும் என்று தெரிகிறது.
முதல் கட்டாக
தற்போது முதல் கட்டமாக விமானப்படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது ஈராக்கின் சிறுபான்மையினரைக் காக்கும் வகையில் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 145 வான்வழித் தாக்குதலை அமெரிக்க விமானப்படையினர் நடத்தி வருகின்றனர்.
அடுத்து ஈராக் ராணுவத்தை பலப்படுத்துவது
அடுத்தகட்டமாக ஈராக்கில் ஒரு தெளிவான அரசு அமைந்ததும், அந்த நாட்டு ராணுவத்தையும், குர்திஷ் போராளிகளையும் தீவிரவாதிகளுக்கு எதிராக பலமாக மோதும் வகையில் பயிற்சி அளித்து பலப்படுத்தும் பணியை அமெரிக்கா செய்யப் போகிறதாம். தேவைப்பட்டால் சன்னி பழங்குடியினருக்கும் கூட பயிற்சி அளிக்கவுள்ளனராம்.
இறுதியாக.. நேரடியாக களம் இறங்குவது
இதையெல்லாம் முடித்து விட்டு இறுதியாக நேரடியாக தீவிரவாதிகளுக்கு எதிராக களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாம் அமெரிக்கா. அதாவது நேரடியாக தனது படையினரை தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்துவது என்பதுதான் அது.
புதன்கிழமை திட்டத்தை வெளியிடுகிறார் ஒபாமா
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்க திட்டம் குறித்த அறிவிப்பை அதிபர் ஒபாமா புதன்கிழமை வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பின்போது அமெரிக்க ராணுவத்தை மீண்டும் ஒரு ஈராக் போரில் தான் ஈடுபடுத்தவில்லை என்பதையும் தெளிவுபடுத்தவுள்ளாராம்.
ரேடியோ மூலம் விளக்கம்
தனது திட்டம் குறித்து முன்னதாக நேற்று அவர் என்பிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியிலும் கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் கூறுகையில், மீண்டும் ஒரு ஈராக் போரில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். படிப்படியாக தீவிரவாதிகளின் பலத்தை அழித்து முழுமையாக அவர்களை செயலிழக்க வைப்பதே அரசின் திட்டமாகும்.
ஆதிக்கத்தை தகர்ப்போம்
தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளைக் குறைப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டைக் குலைப்பதும், ஆதிக்கத்தை தகர்ப்பதுமே இதன் முக்கிய நோக்கம். இறுதியாக அவர்களை நாம் தோற்கடிப்போம் என்றார் ஒபாமா.
தரைப்படை தாக்குதல் இருக்காது
தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாக்குதலைப் போல ஈராக்கில் தரைப்படையினரை தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுத்தாது என்றும் கூறப்படுகிறது. அதற்குப் பதில் ஈராக் படையினருக்குப் பயிற்சி அளித்து அவர்களை தாக்குவதற்கு அனுப்பப் போகிறதாம். இதனால் அமெரிக்காவுக்கு இழப்பு இல்லை. அதேசமயம், அமெரிக்கா வான் வழித் தாக்குதல் மூலமாக இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும்.
அரபு நாடுகளின் உதவியுடன்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் அரபு நாடுகளின் உதவியையும் அமெரிக்கா நாடுகிறது.
எமிரேட்ஸ் உதவத் தயார்
அமெரிக்கா நடத்தும் வான்வழித் தாக்குதலை ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரித்துள்ளது. மறுபக்கம் குர்திஷ் படையினருக்கு ஆயுதம் வழங்கப் போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
இங்கிலாந்தும் களம் புகும்
இன்னொரு புறம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க்கைச் சேர்ந்த பலர் தீவிரவாதிகளுடன் இணைந்திருப்பதால் அந்த நாடுகளும் அமெரிக்காவுக்குத் துணை வரும் என்று தெரிகிறது.
பார்க்கலாம்.. இந்த சண்டை எத்தனை காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்று.