எம்.ஹெச்.17 தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ரஷ்யா தான் ஏவுகணையை அளித்துள்ளது- அமெரிக்கா
வாஷிங்டன்: மலேசிய விமானத்தை சுட்டுத் தள்ள பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை ரஷ்யா தான் தீவிரவாதிகளுக்கு அளித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்யா எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தை ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகள் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
அமெரிக்கா
மலேசிய விமானத்தை தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மற்றும் அதை விண்ணில் ஏவுவதற்கான கருவி ஆகியவற்றை ரஷ்யா தான் தனது ஆதரவுப்படை தீவிரவாதிகளுக்கு அளித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம்
ஜூன் மாதம் 150 வாகனங்களில் ஆயுதங்கள், டேங்குகள், ஏவுகணைகளை ஏவும் கருவிகள் ஆகியவற்றை ரஷ்யா உக்ரைனில் உள்ள தனது ஆதரவுப்படைக்கு அனுப்பி வைத்ததை அமெரிக்கா பார்த்ததாக கெர்ரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா
விமானத்தை தாக்கிய பிறகு ஏவுகணைகளை ஏவும் கருவிகளை ரஷ்ய எல்லைக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மறுப்பு
மலேசிய விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் உக்ரைன் ராணுவம் தான் விமானத்தை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.