சிரியா சண்டையில் 11,000 போராளிகள் கொடூரமாக சுட்டுக்கொலை: அமெரிக்கா, ஐ.நா அதிர்ச்சித் தகவல்
வாஷிங்டன்: சிரியா உள்நாட்டு சண்டையின் போது பிடிபட்ட 11 ஆயிரம் போராளிகளை அந்நாட்டு அரசாங்கம் கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா மற்றும் ஐ.நா. வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்தவரான அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளி குழுக்கள் 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.
இந்நிலையில், சிரியா உள்நாட்டுச் சண்டையின் போது பிடிபட்ட 11 ஆயிரம் போராளிகளை சிரியா அரசாங்கம் கொடுமை படுத்தி சுட்டுக் கொன்று மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் ஜெனிவா 2 அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள ஐநா மற்றும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு அதிபர் பஷர் அல் ஆசாத்தின் 40 வருடகால ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர தேவையான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கும் எனக் கருதப் படுகிறது.
அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் இந்தக் குற்றச்சாட்டு நம்பத்தகுந்ததில்லை என சிரியா அரசு மறுத்துள்ளது. மேலும், போராளிகளுக்கு நிதி உதவி அளித்துவரும் கதார் நாடு தயாரித்துள்ள அறிக்கை இது என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.