எங்கு பார்த்தாலும் கொன்று குவிப்போம், ரத்தத்தில் மூழ்கடிப்போம்.. அமெரிக்காவுக்கு ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை
பாக்தாத்: ஈராக்கில் எங்களது வீரர்கள் யாரையாவது அமெரிக்க விமானப்படையினர் தாக்கினால், மிக மோசமான பதிலடியை நாங்கள் கொடுப்போம். அமெரிக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று குவிப்போம். உங்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்று ஈராக்கின் பெரும் பகுதியை பிடித்து விட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்பு அமெரிக்கா ஈராக்கில் ஊடுறுவியபோது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரரின் துண்டிக்கப்பட் தலை அடங்கிய வீடியோ காட்சியையும் சேர்த்து ஒரு வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில்தான் இந்தப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்ற ஆங்கிலத் தலைப்புடன் கூடியதாக இந்த வீடியோ உள்ளது.
வடக்கு ஈராக்கில்
வடக்கு ஈராக்கில், அமெரிக்க விமானப்படையினர் தொடர் விமானத் தாக்குதலில் ஈடுபட்டதன் மூலம் அங்கு யாஸிதி சிறுபான்மையினரை மீட்க முடிந்தது. மேலும் குர்திஷ் படையினரும் தற்போது அங்கு வலுப்பெற்று விட்டனர். தீவிரவாதிகள் பிடித்த சில நகரங்களையும் குர்திஷ் படையினர் மீட்டுள்ளனர்.
யாஸிதிகள் மீட்பு
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அப்பாவி ஈராக்கியர்களையும் ஈராக் படையினரையும் கொடூரமாக கொன்று குவித்தபோதெல்லாம் உதவிக்கு வரவில்லை அமெரிக்கா. ஈராக் அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட வரவில்லை. ஆனால் வடக்கு ஈராக்கில், கிறிஸ்தவர்கள் மற்றும் யாஸிதி சிறுபான்மையினர் தீவிரவாதிகளிடம் சிக்கி படுகொலைக்கு ஆளானதும் அமெரி்க்கா தனது விமானப்படையினரை அனுப்பி தாக்குதலில் ஈடுபடுத்தியது.
தாக்குதலை விரிவுபடுத்துமா அமெரிக்கா
இருப்பினும் ஈராக்கின் பல பகுதிகளையும், சிரியாவில் சில பகுதிகளையும் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து முன்னேறியும் வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது தாக்குதலை விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் எச்சரிக்கை
இதையடுத்தே தீவிரவாதிகள் அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதற்கிடையே திங்கள்கிழமை செய்தியாளர்களிடையே பேசிய அதிபர் பராக் ஒபாமா, ஈராக்குக்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் மிகப் பெரிய மிரட்டலாக ஐஎஸ்ஐஎஸ் உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.