தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்கரை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விற்று விட்டனரா சிரிய புரட்சியாளர்கள்?
வாஷிங்டன்: ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீவன் சோட்லாப், முதலில் சிரிய புரட்சியாளர்கள் பிடியில்தான் இருந்துள்ளார். ஆனால் அவரை, சிரிய புரட்சியாளர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து தங்களிடம் உறுதியான தகவல் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளார்.
ஆனால் சோட்லாப்பை 50,000 டாலர் பணம் கொடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாங்கியதாக தாங்கள் நம்புவதாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள். இந்தப் புகாரை சோட்லாப் குடும்பத்தாரின் செய்தித் தொடர்பாளர் பாரக் பர்பி கூறியுள்ளார்.
அமெரிக்கா மறுப்பு
ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் எர்னஸ்ட் கூறுகையில், எனக்குக் கிடைத்த, கொடுக்கப்பட்ட தகவலின்படி இது தவறானது, சரியானதல்ல என்று கூறிக் கொள்கிறேன். இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
எப்பிஐ விசாரணை
சிரியாவில் சிக்கியிருந்த சோட்லாப் எப்படி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கைக்கு வந்தார் என்பது குறித்து எப்பிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடியவில்லை என்றார் எர்னஸ்ட்.
சிரியாவில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட சோட்லாப்
சோட்லாப் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் வைத்துக் கடத்தபப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல் எதுவும் இல்லை. இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி அவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
குடும்பத்தாரின் குமுறல்
ஆனால் சோட்லாப்பை சிரியா புரட்சியாளர்கள் சிறைப்பிடித்து பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விற்று விட்டதாக அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோட்லாப் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் பர்பி கூறுகையில், அடையாளம் தெரிவிக்காத சில தகவல்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், சிரிய புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டு சோட்லாப் குறித்துக் கூறியுள்ளார். பின்னர் அவர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு சோட்லாப்பை விற்றுள்ளனர்.
ஒபாமா அரசு நிர்வாகம் சரியில்லை
சோட்லாப் விவகாரத்தை ஒபாமா நிர்வாகம் கையாண்ட விதம் சோட்லாப் குடும்பத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து சோட்லாப் குடும்பத்தினர் விரைவில் வெளிப்படையாக பேசுவார்கள் என்றார் பர்பி.
சிரியாவுக்கு அமெரிக்கா உதவி
இதற்கிடையே சிரியாவில் அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத்தை எதிர்த்துப் போராடி வரும் சிரிய எதிர்க்கட்சிகளுக்கு நிதியுதவியை அளிக்க முடிவு செய்துள்ளார் ஒபாமா. சோட்லாப் குடும்பத்தினரின் புகார் பின்னணியில் ஒபாமாவின் இந்த முடிவு அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் பல பகுதிகள் காலி
ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் பல பகுதிகளை தங்களது வசம் கொண்ட வந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். ஈராக்கின் சில பகுதிகளையும் பிடித்து இரு பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய குடியரசையும் அவர்கள் நிறுவியுள்ளனர்.
2 அமெரிக்கர்கள் கொலை
மேலும் இதுவரை ஜேம்ஸ் போலி மற்றும் சோட்லாப் என இரு அமெரிக்க பத்திரிகையாளர்களையும் அவர்கள் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.