கள்ளத்தொடர்பு: சிரியாவில் 2 நாட்களில் 2 பெண்களை கல்லால் அடித்துக் கொன்ற போராளிகள்
டமாஸ்கஸ்: சிரியாவில் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி பெண் ஒருவரை போராளிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
சிரியாவில் போராளிகள் பிடியில் உள்ள பகுதியில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி கள்ளத்தொடர்பு வைத்திருந்த பத்தா அகமது என்ற பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய போராளிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொது இடத்தில் ஒரு குழியை தோண்டி அவரை இடுப்பளவு புதைத்தனர். பின்னர் ஒரு லாரி நிறைய கற்கள் கொண்டு வந்து போட்டு பத்தாவை அடிக்குமாறு மக்களிடம் கூறினர். ஆனால் அவரை அடிக்க மக்கள் முன்வரவில்லை. இதையடுத்து போராளிகளே பத்தா அகமதை கல்லால் அடித்துக் கொன்றனர்.
அவர்கள் கல்லால் அடித்தபோது கூட கருப்பு நிற புர்கா அணிந்திருந்த பத்தா சிறு சத்தம் கூட போடவில்லையாம். முன்னதாக கடந்த மாதம் 17ம் தேதி இதே கள்ளத்தொடர்பு குற்றத்திற்காக ஷம்சே அப்துல்லா(26) என்ற பெண்ணை போராளிகள் கல்லால் அடித்து கொலை செய்தனர்.
முன்னதாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காத 14 வயது சிறுவனை போராளிகள் சிலுவை போன்ற ஒன்றில் கட்டிவைத்து கொளுத்தும் வெயிலில் வாடவிட்டனர். போராளிகள் மக்களை தண்டிக்கும் முறை அவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.