கன மழையால் கடைசி நேரத்தில் பாதை மாறி விபத்துக்குள்ளான ஏர் அல்ஜியர்ஸ் விமானம்
ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புர்கினோ பாஸோ நாட்டின் Ouagadougou நகரில் இருந்து கிளம்பிய அல்ஜீரியா நாட்டு ஏர் அல்ஜியர்ஸ் விமானம் பக்கத்து நாடான மாலியில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
மாலி நாட்டின் வட பகுதியில் அல்ஜீரியா தென் பகுதியில் புர்கினோ பாஸோ நாடும் உள்ளன.
மாலி நாட்டு அதிபர் அலுவலகம்..
புர்கினோ பாஸோவில் இருந்து நேற்று காலை இந்த விமானம் அல்ஜீரியா சென்றபோது தரைக்கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது. இந் நிலையில் இந்த விமானம் தனது நாட்டில் விழுந்து நொறுங்கியுள்ளதாக மாலி நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமானத்தின் உடைந்த பகுதிகளும் பயணிகளின் உடல்களும் புர்கினோ பாஸோ- மாலி எல்லையில் உள்ள கிராமத்தில் சிதறிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், புர்கினோ பாஸோவைச் சேர்ந்தவர்கள்...
விமானத்தில் இருந்த 116 பேரும் பலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் மற்றும் புர்கினோ பாஸோவைச் சேர்ந்தவர்கள்.
விமானம் தொடர்பை இழந்தவுடன் பிரான்ஸ் நாடு தனது இரு போர் விமானங்களை புர்கினோ பாஸோவுக்கு அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதையடுத்து அந்த நாட்டில் பிரான்ஸ் தனது படைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம்?...
இதனால் இந்த விமானத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர்களிடம் விமானத்தை வீழ்த்தக்கூடிய அளவுக்கு ஆயுதங்கள் இல்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கன மழையில் பறந்த விமானம்...
இதனால் கன மழையில் பறந்த இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. மழை மிகத் தீவிரமாக இருந்ததால் விமானத்தை வேறு பாதையில் செலுத்த அனுமதி கோரினர் இந்த விமானத்தின் பைலட்கள். இதற்கு நைஜர் நாட்டு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் அனுமதியும் தந்தது. இதையடுத்த சில நிமிடங்களில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்டது, தைவான் நாட்டு விமானம் விபத்துள்ளானது. இதையடுத்து இந்த விமான விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.