மும்பை: உலக கோப்பை அணியை தேர்வு செய்யும்போது, யுவராஜ்சிங் பெயரையும் ஆலோசித்துவிட்டுதான், வேண்டாம் என்று விட்டுவிட்டோம் என்று கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.
உலக கோப்பைக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணியில், யுவராஜ்சிங் பெயர் இல்லாதது குறித்து அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியது:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணி ஒரு மாதம் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் யுவராஜ்சிங் பெயர் சேர்க்கப்படவில்லை. இருந்தாலும்கூட, அந்த முப்பது பெயர்களை தவிர்த்து, யுவராஜ்சிங் உள்ளிட்ட பல வீரர்கள் பெயர்கள் தேர்வு குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
தேர்வு குழுவில் இருந்த ஐந்து பேரை தவிர, அணி தேர்வு குறித்து ஆஸ்திரேலியாவிலுள்ள கேப்டன் டோணி மற்றும் பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோரிடமும் ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகுதான் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இவ்வாறு சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.
எனவே யுவராஜ்சிங்கை அணியில் சேர்க்காதது குறித்த தகவல், அணியை அறிவிக்கும் முன்பே, டோணிக்கும் தெரிந்திருக்கும் என்பது உறுதியாகிறது. டோணியே விரும்பி யுவராஜை வேண்டாம் என்றாரா, அல்லது டோணி கேட்டுக்கொண்டும் பிசிசிஐ தேர்வு குழு, யுவராஜ் வேண்டாம் என்று முடிவு எடுத்ததா என்பதை டோணிதான் தெரிவிக்க வேண்டும்.