ஜெய்ப்பூர்/ மைசூர்: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் நிலையில் மறுபக்கம் பெட்டிங்குகளும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபட்டதாக மொத்தம் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஆகாஷ் மாத்தூர், கரன் சர்மா, முகேஷ் மீனா, வேத்பிரகாஷ், லால்சந்த், ஃபைசல்ஆகிய ஆறு புக்கிகள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதும் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பெட்டிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கப்பணமும், பல லட்ச ருபாய் பணபரிவர்த்தனைக்கான வங்கி ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர்கள் வைத்திருந்த லேப் டாப், செல்போன்கள், எல்.ஈ.டி டி.வி ஆகிவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கர்நாடகா மாநிலம் மைசூர் கோட்டேஹள்ளி எஸ்.ஆர்.எஸ். காலனியில் ஒரு வீட்டில் திடீர் சோதனை நட்த்தப்பட்டது.அப்போது அங்கு கிரிக்கெட் பெட்டிங் நடைபெற்றது தெரிய வந்தது.
இதையொட்டி வெங்கடேஷ், புருஷோத்தமா மற்றும் காந்தராஜு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள், 9 சிம் கார்டுகள், மோட்டார்சைக்கிள், எல்.சி.டி. டிவி, மடிகணினி, பிரிண்டர், டேட்டா கார்டு, செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.4580 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.