துபாய்: துபாயில் வருங்கால இந்திய அணியில் இடம் பெற இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர் அனீஷ் வாசுதேவனுக்கு பாராட்டு விழா 10.04.2014 அன்று மாலை துபாய் இந்தியா கிளப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க ஈவென்ட்ஸ் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கிரிக்கெட் உலகில் அனீஷ் மேற்கொண்டு வரும் சாதனைகள் குறித்து விவரித்தார்.
12 வயதாகும் அனீஷ் துபாய் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு போட்டிகளில் விளையாடி சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த ஆல் ரவுண்டர், சிறந்த பந்து வீச்சாளர் என பல்வேரு விருதுகளைப் பெற்றுள்ளார். மிக இளம் வயதில் 13,000 மணி நேரத்துக்கும் மேற்பட்ட அளவில் தனது நேரத்தை பயிற்சிக்காக செலவழித்துள்ளார்.
துபாயில் ஐ.சி.சி. கிரிக்கெட் அகாடமியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சி பெற்று வரும் அனீஷின் திறமையைக் கண்டு வியந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் அனீஷ் இந்திய அணியில் எதிர்காலத்தில் நிச்சயம் இடம் பிடித்து இந்தியாவின் பெருமையினை உலகறியச் செய்வார் என வாழ்த்தியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நேரத்தில் இருந்த பொழுது அம்பயர் அவுட் என அறிவிக்காத போதும் தனக்கு அது அவுட் என தெரிந்ததும் மைதானத்தை விட்டு வெளியேறி தனது நேர்மையினை வெளிப்படுத்தியுள்ளார் அனீஷ்.
டெக்பே தலைமை செயல் இயக்குநர் திக்ரன் சாப்லாக்யன், அல் சமா கிரிக்கெட் கிளப் இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் சஹ்சாத் அல்தாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று அனீஷை வாழ்த்தினர்.
இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே. குமார் அனீஷ் கிரிகெட் உலகில் சாதனை படைக்க வாழ்த்தியதுடன், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்த வைப்பதன் மூலம் இன்றைய உலகில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்ககூடியவர்களாக வலம் வருவர் என்றார்.
துபாய் தமிழ்ச் சங்கம் ஈவென்ட்ஸ் துணைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ முஹம்மது தாஹா ஆகியோர் அனீஷ் தனது நேர்மையினை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இது பிரகாசமான எதிர்காலத்தை கிரிகெட் உலகில் ஏற்படுத்தும் என்றனர்.
லண்டன் ரக்பி பள்ளியில் உதவித்தொகையுடன் படித்திடவும், கிரிக்கெட் பயிற்சிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இந்தியாவின் பெங்களூரில் படிப்பினையும் கிரிக்கெட் பயிற்சியினையும் மேற்கொள்ள தாயகம் பயணமாகும் அனீஷ் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரராக அமீரக மண்ணில் விளையாட வருவார் என்ற நம்பிக்கையில் அனைவரின் வாழ்த்துக்களோடு அமீரகத்திலிருந்து விடைபெற்றார்.
தங்களது மகனை வாழ்த்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாசுதேவன் மற்றும் அனுராதா வாசுதேவன் தம்பதியினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பிறந்த நாள் விழா உள்ளிட்டவற்றைக் கொண்டாடினாலும் ஒரு சிறுவனின் நேர்மையை பாராட்டும் விதமாக நடைபெற்ற இவ்விழா ஒரு வித்தியாசமாக இருந்தது. மேலும் பெற்றோர்களுக்கு இவ்விழா ஒரு புதிய செய்தியினை உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.