இன்சியான், தென் கொரியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதாக அறிவித்த 2 அணிகளை கடைசி நேரத்தில் இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் 10,000 டாலர் அதாவது ரூ. 6.08 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியாவும் கலந்து கொண்டு பதக்க வேட்டையில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில். கடைசி நேரத்தில் 2 அணிகளை திரும்பப் பெற்றதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 6.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்...
ரக்பி 7ஸ் மற்றும் பீச் வாலிபால் ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்ட அணிகளை கடைசி நேரத்தில் இந்தியா திரும்பப் பெற்றதால் இந்த அபராதமாம்.
அட்டவணை மாற்றம்...
இந்த திடீர் விலகல் காரணமாக போட்டி அட்டவணை மற்றும் போட்டிகளை கடைசி நேரத்தில் மாற்ற வேண்டி வந்ததால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளளது.
எச்சரிக்கை...
மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடும் எச்சரிக்கையும் கொடுத்துள்ளதாம்.
தவறு...
இந்தியா உத்தேச அணியை அறிவித்து அதை திரும்பப் பெற்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் போட்டியில் பங்கேற்பதாக உறுதி அளித்து விட்டு திரும்பப் பெற்றது தவறு என்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளது.
குற்றச்சாட்டு...
ஆனால் இந்தக் குழப்பங்களுக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டிதான் காரணம் என்கிறார்கள். கடைசி நேரம் வரையிலும் அணிகளை அது தேர்வு செய்து கொண்டிருந்ததே இந்தக் குழப்பம் ஏற்படக் காரணம் என்கிறார்கள். மேலும், விளையாட்டுத்துறையும், கூட மெத்தனம் காட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.