இன்சியான்: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் அசத்திய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம்வென்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணிஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றது.
தென் கொரியாவின் இன்சியான்நகரில், 17வது ஆசிய விளையாட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.
13வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதன் 3வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் முகமது ஒரு கோல் அடித்தார். இதற்கு 27வது நிமிடத்தில் இந்தியாவின் கோதாஜி சிங் ஒரு கோல அடித்து பதிலடி தந்தார். 60 நிமிட ஆட்டத்தின் முடிவில் போட்டி 1-1 என டிரா ஆனது.
மிரட்டிய இந்திய அணி
இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி 'பெனால்டி ஷுட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் மிரட்டிய இந்திய அணி 4-2 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது
16 ஆண்டுகளுக்குப் பின்
தவிர ஆசிய விளையாட்டில் 16 ஆண்டுகளுக்குப்பின் தங்கப்பதக்கம் வெ்னறது.கடைசியாக 1998ல் பாங்காங்கில் நடந்த போட்டியில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான அணி தங்கம் வென்றிருந்தது.
இரண்டாவது முறை
இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டங்களில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை 8 முறை எதிர்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி ஒரு முறையும், பாகிஸ்தான் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய இறுதிப்போட்டியில் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
கடைசியாக 1982ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிய இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஒலிம்பிக் போட்டியில் வாய்ப்பு
இன்றைய ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதிப்பெற்றுள்ளது ஆடவர் ஹாக்கி அணி
மகளிர் ஹாக்கியில் வெண்கலம்
இதனிடையே நேற்றைய தினம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய மகளிர் அணி ஜப்பானை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா பதிலடி
இதன் மூலம் கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்ததற்கு, இந்திய அணி தற்போது பதிலடி கொடுத்துள்ளது.