சியோல்: ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மின்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
தென் கொரிய நாட்டில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் காலிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சாய்னா நேஹ்வாலும், சீனாவின் வாங் ஷிஷிக்ஷியானும் மோதினர்.
இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட நிலையில், 21-18, 9-21, 7-21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வியை தழுவினார்.
கடந்த இரு வருடங்களாகவே சாய்னா பெரிய போட்டித் தொடர்களில் சோபிக்க தவறி வருகிறார். ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திடீரென தனது பயிற்சியாளரை மாற்றி அதிர்ச்சியளித்தார் சாய்னா.
ஆசிய விளையாட்டு போட்டியில் சாதித்தால் மட்டுமே அவர் எடுத்த கடைசி நேர முடிவு பாராட்டுக்குள்ளாகும், அல்லது கடும் விமர்சனத்தை அவர் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.